அரசு ஊழியரின் அடங்காத சில்மிஷம்.. கன்னியாகுமரியே விழிக்குது.. ஓடிவந்த மாதர் சங்கம்.. சபாஷ் கலெக்டர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு அலுவலகத்தில் பணிபுரியும் சயீத் உசேன் மீதான அடுத்தடுத்த நடவடிக்கை பாயும் என தெரிகிறது.. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு ஒன்றையும் தற்போது பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓ வாக வேரை பார்த்து வந்தவர் சயீத் உசேன்... இவர் திருவட்டாரில் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, சயீத் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன..

பெண் பணியாளர்கள்: இதனால், வட்டார வளர்ச்சி அலுவலர், இயக்குநருக்கு பெண் பணியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சயீத் மீது பாலியல் புகார்களை தந்தனர்.. எனவே, இந்த புகார்கள் மீது விசாரணையும் நடைபெற்று வந்தது. இறுதியில் சயீத் மீது நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் உத்தரவிட்டார்..
இதையடுத்து, சயீத் உசேன் திருவட்டாரில் இருந்து மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். ஆனால், அந்த அலுவலகம் சென்றும்கூட, பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது... இதற்கான ஆதாரங்கள் அத்தனையும், அந்த அலுவலகத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கேமரா காட்சிகளை வைத்து, மீண்டும் பெண் பணியாளர்கள், தங்களது உயர் அதிகாரிகளுக்கு புகார்களை தந்தனர்.
டிரான்ஸ்பர்: எனவே, மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து 10 நாட்களில் அவரை ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு டிரான்ஸ்பர் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆனால், சயீத் மீது வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல், வெறுமனே டிரான்ஸ்பர்களை தந்து வருவது சலசலப்பை கிளப்பிவிட்டுள்ளது.. இது தொடர்பாக மாதர் சங்கத்தினர், குமரி மாவட்ட கலெக்டரிடமே நேரில் சென்று முறையிட்டனர். அத்துடன், பெண் பணியாளர்களுக்கு, பலமுறை பாலியல் தொல்லை தந்தும்கூட, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை ஏன் பாதுகாக்க வேண்டும்? அவரை பாதுகாக்கும் வகையில்தான் இடமாறுதல்களும் நடக்கிறதே? என்று கேள்வி எழுப்பினர்.
கலெக்டர் அதிரடி: இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உதவி திட்ட அதிகாரிக்கு கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். அதன்படியே, மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மண்டல அதிகாரியாக உள்ள உதவி திட்ட அதிகாரி (ஹவுசிங்) இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை கலெக்டரிடம் தந்துள்ளனர்.
இந்த அறிக்கையின் பேரில், சயீத் உசேனை பணியிலிருந்தே விடுவிப்பு செய்து கலெக்டர் அழகுமீனா தற்போது உத்தரவிட்டுள்ளார்.. அரசு துறை அலுவலகங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்து அதன் அடிப்படையில் சயீத் உசேன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பெண் ஊழியர்கள்: பொதுவாக, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என்றும், அதற்கு மேலான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே மாதர் சங்கத்தினரின் நீண்ட கால கோரிக்கையாகும்.. அதுதான் தற்போது குமரியில் நடந்துள்ளது..!
கலெக்டர் உத்தரவு: 2 நாட்களுக்கு முன்புகூட மாவட்ட கலெக்டர் அழகுமீனா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதாவதா, 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுவது தெரியவந்தால் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுஇடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்கள் எழுந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அறிவுறுத்தல்: அதுமட்டுமல்ல, அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு தெரியும் வகையில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்றும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை 1098 மற்றும் 181 என்ற கட்டணமில்லா எண்களில் தெரிவிக்கலாம் என்றும், கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் இருப்பின் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications