புது வண்டி வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை.. கன்னியாகுமரி மீரா சந்தித்த பெரிய பிரச்சனை.. நீதிமன்றம் அதிரடி
கன்னியாகுமரி: புது வண்டியில் வாகன ஓட்டத்தின்போது என்ஜின் ஆப் ஆகி நிற்பது, முக்கோண எச்சரிக்கை குறியீடு ஒளிர்வது, கிக் ஸ்டார்ட் செய்யும்போது வாகனத்தில் அதிகமான அதிர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தது. இதனால் நொந்தபோன வாகன ஓட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கியோருக்கு பெரிய இடி எது என்றால், அந்த வாகனம் சரியாக ஓடாமல் அடிக்கடி பிரச்னையில் சிக்குவதுதான்.. புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனை இலவசமாக பைக் நிறுவனங்கள் சரி செய்து தருகின்றன. திரும்ப திரும்ப பிரச்சனை ஏற்படும் போது, குறிப்பாக என்ஜினில் பிரச்சனை ஏற்படும் போது, மக்கள் புது வண்டியை கேட்கிறார்கள். ஆனால் புதிய வண்டியை நிறுவனங்கள் தருவது இல்லை.. அப்படி ஒரு பிரச்சனையை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் மீரா ரிஸ்வானா. இவர் தனது சொந்த தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள ரபல இருசக்கர வாகன விற்பனை ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து கடந்த 27-1-2023 அன்று செல்ப் ஸ்டார்ட் வசதி கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
அந்த புதிய இருசக்கர வாகனம், வண்டி ஒடிக்கொண்டிருக்கும் போதே, என்ஜின் ஆப் ஆகி நிற்பது, முக்கோண எச்சரிக்கை குறியீடு ஒளிர்வது, கிக் ஸ்டார்ட் செய்யும் போது வாகனத்தில் அதிகமான அதிர்வு போன்ற பிரச்சினைகள் வந்துள்ளது. இதுபற்றி வாகனம் எடுத்த ஏஜென்சியில் சென்று 2-2-2023 அன்று கேட்டுள்ளார். மீண்டும் மீண்டும் பிரச்சனை வந்து கொண்டிருந்ததால், விரக்தியான மீரா, வேறு புதிய வாகனத்தை மாற்றித்தர கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஏஜென்சி நிறுவனம் வேறு புதிய வாகனம் கொடுக்காமல் ஓரிருமுறை சரிசெய்து மட்டும் கொடுத்திருக்கிறதாம். இதனால் 17-2-2023-ல் வாகன ஓட்டம் தடைபட்டு வாங்கிய ஏஜென்சி ஒர்க் ஷாப்பில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கவில்லை.. இதனால் வாகனத்தை மீரா பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். .
மேலும் தனக்கு நிவாரணம் வேண்டி மீரா ரிஸ்வானா, கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாமஸ்சிடம் புகார் மனு கொடுத்தார். இந்த அமைப்பின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் (நீதிபதி) கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூர், உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகன ஏஜென்சி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ஒரு மாத காலத்துக்குள் ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகையுடன், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமும், புதிய பாகங்கள் மாற்றப்பட்டு தரமான செயல்பாட்டு நிலையில் வாகனம் ஒப்படைக்க வேண்டும். இந்த, தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் மொத்த தொகைக்கும் 9 சதவீத வருட வட்டியை வழங்கப்படும் நாள் வரை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications