"ஜாதகம்.." காதலனுக்கு கூலாக கூல்ட்ரிங்சில் விஷம் கொடுத்து கொன்ற காதலி.. திடீர் தற்கொலை முயற்சி!
குமரி: தமிழக கேரள எல்லையில் காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற காதலி காவல் நிலையத்தில் கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எல்லையோர கேரள மாநிலத்திற்குள்பட்ட பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தார். இவர் அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கு அவரது காதலி கிரீஷ்மாதான் காரணம் என ஷாரோனின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

தனிப்படை
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாரோன் காதலியின் குடும்பத்தினர் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் முதல் கணவர் உயிரிழப்பார் என்றும் இரண்டாவது கணவருடன் மட்டுமே வாழ முடியும் என ஜாதகத்தை பார்த்து ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

தாலி கட்டிய ஷாரோன்
இதை நம்பிய கிரீஷ்மா, ஷாரோனுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு ஓடி வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய ஷாரோன் அவரை நேரில் போய் சந்தித்துள்ளார். அப்போது தன் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தற்போது தாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.

குளிர்பானத்தில் விஷம்
இதை நம்பிய ஷாரோன், ஒரு கோயிலில் வைத்து கிரீஷ்மாவுக்கு தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரை ஒரு இடத்திற்கு அழைத்து வந்த கிரீஷ்மா, முதலில் கசாயம் ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் குளிர்பானத்தையும் கொடுத்தார். இதில் குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்ததால் ஷாரோனின் அனைத்து உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டன.

காதலி தற்கொலை முயற்சி
இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஷாரோனின் காதலி கிரீஷ்மாவை நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கிரீஷ்மா தனக்கு கழிப்பறை செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். உடனே அவருடன் இரு பெண் காவலர்கள் சென்றனர். கிரீஷ்மாவை சோதனை செய்து பாத்ரூமிற்குள் அனுப்பி வைத்தனர். அங்கிருந்த தரையை சுத்தம் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை எடுத்து குடித்தார். தனது தற்கொலை முயற்சி குறித்து வெளியே வந்து இரு பெண் காவலர்களிடம் தெரிவித்த கிரீஷ்மா உடனே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது குடலில் இருந்த கிருமிநாசினி சுத்தம் செய்யப்பட்டது. அவரது உடல்நலம் சீராக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அபாய கட்டத்தில் அவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications