எண்ணெய் குளியல்+விபச்சாரம்.. நாகர்கோவிலில் நடத்தும் வக்கீல்.. போட்ட வழக்கால் ஆடிப்போன ஐகோர்ட்
கன்னியாகுமரி: நாகர்கோவில் எண்ணெய் குளியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான சேவைகளை வழங்கும் மனமகிழ் மன்றதை நடத்தும் வக்கீல் ஒருவர் அதற்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு போட்டதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில்," கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறக்கட்டளை தொடங்கி மனமகிழ் மன்றம் நடத்தி வந்தேன். ஆனால் போலீசார் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

இதனால் எனக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு வழங்கவும், இழப்பீடு அளிக்கும்படியும் உத்தரவிட வேண்டும் " அந்த மனுவில் வக்கீல் கூறியிருந்தார்.இந்நிலையில் விபசார விடுதிக்கு பாதுகாப்பு கேட்டு வக்கீல் வழக்கு போட்டதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த வக்கீலின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு; மனுதாரர் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பொழுதுபோக்கு மற்றும் பிற செயல்பாடுகளை ஊக்குவிப்பது என்று கூறியிருக்கிறார் மனுதாரர். அதில் உறுப்பினராக உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் எண்ணெய் குளியல் மற்றும் பாலியல் தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும் மனுதாரர் கூறியிருக்கிறார.
ஆனால் நாகர்கோவிலில் உள்ள மனமகிழ் மன்றத்தில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். சோதனைக்கு பின்னர் மனுதாரரை கைது செய்து உள்ளனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மனுதாரர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றுவதாக கூறியிருக்கிறார்.
வக்கீல் ஒருவர் தான் நடத்தி வரும் விபசார மையத்துக்கு பாதுகாப்பு கோருவது இந்த நீதிமன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் வக்கீலுக்கு படித்த சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் எந்த சான்றிதழையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.மனுதாரரின் அறக்கட்டளையில் போலீசார் சோதனை செய்தபோது, 3 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. இவர்களில் ஒருவர் சிறுமி. இவர்களை வேலை வாங்கித்தருவதாக கூறி, இந்த தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த பெண்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
விபசார விடுதி நடத்துவதை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான கோணத்தில் பார்க்கின்றன. தமிழகத்தில் பெண்களை தவறாக வழிநடத்துவது, கடத்தல் போன்றவற்றை தடுக்க சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னார்வ பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறு கிடையாது. ஆனால் விபசார விடுதி நடத்துவது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
வக்கீல் தொழில் என்பது சமுதாயத்திற்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது. எனவே வக்கீல்கள் சமுதாயத்தின் என்ஜினீயர்களை போன்று கருதப்படுகிறார்கள். அவர்கள் தான் சமூக மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வருகிறார்கள். ஒரு நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை பராமரிக்க சட்டம் இன்றியமையாதது ஆகும். மேலும் சட்டத்தை நிலைநிறுத்துவதில் வக்கீல்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
மனுதாரர் சிறுமி ஒருவரின் வறுமையை பயன்படுத்தி, அவரை பாலியல் தொழிலில் தள்ளியிருக்கிறார். மனுதாரர் தன்னை வக்கீல் என்று கூறி, மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதுதான் பெரும் துரதிர்ஷ்டம். கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக இருக்கிறது. ஆனால் அங்கும் வக்கீல் என்ற பெயரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளார்கள்.
சமுதாயத்தில் வக்கீல்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணரும் நேரம் இதுவாகும். இனியாவது, தரமான கல்வி நிறுவனங்களில் படித்த வக்கீல்களை மட்டும் அங்கீகரிப்பது நல்லதாகும். மனுதாரரின் சட்டப்படிப்பு குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை போலீசார் 5 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ,10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" இவ்வாறு நீதிபதி புகழேந்தி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications