Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டைக்காடு பகவதி அம்மன் பலம் உள்ளது..விமர்சனங்களைப் பற்றி கவலையில்லை..தமிழிசை சவுந்தரராஜன்

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மண்டைக்காடு அம்மன் எனக்கு உயர்வைத் தருகிறார். அதை தமிழ் மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். என்னை விமர்சனம் செய்கிறார்கள், பரிகாசம் செய்கிறார்கள் அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் நான் கவலைப்படமாட்டேன். ஏனென்றால் மண்டைக்காடு அம்மையின் பலம் முழுவதும் எங்களிடம் இருக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான மாசிக்கொடை விழா கொடியேற்றம் விமரிசையாக தொடங்கியது.

Mandaikadu Bhagwati Amman has strength dont care about criticism says Tamilisai Soundararajan

கோவில் தந்திரிகள் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சி தலைவர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கத்தின் இந்து சமய மாநாட்டை தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினார். இறைவனின் துணை இல்லையென்றால் நம்மால் எதையுமே சாதிக்க முடியாது. தமிழ் என்றால் ஆன்மிகம். ஆன்மிகம் இல்லாத தமிழ் என்ற ஒரு தோற்றத்தை சில பிரிவினர் பன்னெடுங்காலமாக ஏற்படுத்த முயல்கின்றனர். ஆன்மிகத்தோடு கூடிய தமிழ்தான் நாமெல்லாம் போற்றி பாராட்டக்கூடியது. ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை, தமிழ் இல்லையென்றால் ஆன்மிகம் இல்லை. ஆண்டாள் எளிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நிறைய பாடல்கள் தந்திருக்கிறார்.

தமிழ் என்றாலே அதற்கு பூஜையெல்லாம் கிடையாது, தமிழர்களுக்கு அத்தகைய வழக்கம் கிடையாது எனச் சிலர் பேசிவருகின்றனர். இறைவன் என்றாலே அதற்கு பூஜை, சடங்குகள் எல்லாம் உண்டு. சங்க காலத்திலிருந்தே பூஜைகளும், சடங்குகளும் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. சங்கப் பேரரசர் ஒருவருக்கு குடுமி அரசர் என்ற பெயர் உண்டு. அவர் வேத முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்தார் என்று சங்க இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் நல்லவற்றை எடுத்து நல்லவற்றையே பிறருக்குக் கொடுப்பார்கள். தமிழனைப் பொறுத்தவரையில் சுயநலவாதி கிடையாது. அதனால்தான் பிறமாநிலத்திலிருந்து நமக்காக வேலை செய்ய வருபவர்களைத் தாயுள்ளத்தோடு அரவணைக்கிறோம்.

தமிழர்கள் இந்த தேசத்தை மதிப்பவர்கள். பிறரை மதிப்பது தவம் என்று நமக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். மதத்தைப் பற்றி பேசுவதைப் பிரிவினை வாதம் என நினைக்காமல் பதிவு வாதம் என நினைக்க வேண்டும். பிரிவினை வாதம் இல்லாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்வதைதான் நம் மதம் நமக்குச் சொல்லிக்கொடுத்தது.

ஒரு சிலர் இணையதளங்களில் தவறான கருத்தைப் பரப்பி, அவர்களுக்கு மட்டும்தான் மொழிப்பற்று இருப்பதாக நினைத்து தவறான முன்னிறுத்தலால் இணையதளங்களில் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.
மண்டைக்காடு அம்மன் எனக்கு உயர்வைத் தருகிறார். அதை தமிழ் மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். என்னை விமர்சனம் செய்கிறார்கள், பரிகாசம் செய்கிறார்கள் அதைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் நான் கவலைப்படமாட்டேன். ஏனென்றால் மண்டைக்காடு அம்மையின் பலம் முழுவதும் எங்களிடம் இருக்கிறது. அந்த பலத்தால் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கவலைப்படமாட்டோம்.

ஏதோ ஒரு மாநிலத்தில் பிரச்னை வந்தாலும், அந்த மாநிலத்தவர்கள் கவலைப்படுவதில்லை. நம் மாநிலத்தில் இணையதளவாசிகள் பொங்கு பொங்கு எனப் பொங்குகிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டோம். மண்டைக்காடு அம்மனின் பலம் இருப்பதால் எங்களை அசைக்க முடியது என்றும் கூறினார்.

மண்டைக்காடு கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்த நாகர்கோவில் நகராட்சி முன்னாள் சேர்மன் பாஜகவைச் சேர்ந்த மீனாதேவ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கினார். தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உடனடியாக மீனாதேவை சோதித்துப் பார்த்தார். அவரது பல்ஸ் இறங்கியிருந்தது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசை செளந்தரராஜன் பின்னர் மீனாதேவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

Mandaikadu Bhagwati Amman has strength dont care about criticism says Tamilisai Soundararajan

கொடை விழாவை முன்னிட்டு முதல்நாள் பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடக்கிறது. 2வது நாளான இன்று பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பக்தர்களால் அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜையும், 3வது நாள் முதல் 9வது நாள் வரை காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும்.

திருவிழாவின் 10வது நாளான 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மனுக்கு மூன்று கால பூஜைகள் அத்தாள பூஜைகள் நடைபெறுவதோடு வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. பத்தாவது நாள் இரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடையும் நிலையில் அன்று உள்ளூர் விடுமுறையும் விடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+