எல்லாத்துக்கும் காரணம் சங் பரிவார் தான்! ஊதுகுழலாக இருக்கிறார் ஆளுநர் ரவி! மதிமுக வைகோ விளாசல்!
கன்னியாகுமரி : தமிழ்நாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஆளுநரை இயக்குவது சங் பரிவார் , அவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்
தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்தே திமுக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை அவர் முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தவிர ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதனம், அகண்ட பாரதம், திருக்குறள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆளுநருக்கு எதிராக திரும்பி இருக்கின்றன.

ஆளுநர் ரவி
மேலும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த ஆளுநர் ரவி தற்போது பேசியிருக்கும் பேச்சு கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த புதன்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு குறித்து பேசியது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுவதும் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும் இவற்றை உடைக்க வேண்டும்

தமிழ்நாடு
தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா பாரதத்தின் அடையாளம், தமிழ் நாடு என்பதை விட தமிழகம் என்று சென்னால் தான் சரியாக இருக்கும் என கூறினார். ஆளுநர் ஆர் என் ரவியின் தமிழ்நாடு - தமிழகம் குறித்த பேச்சு அரசியல் தாண்டி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் திமுக தலைவர்களும் பிற கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வைகோ
ஆளுநரை இயக்குவது சங் பரிவார் , அவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நாகர்கோவில் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆளுநரை இயக்குவது சங் பரிவார் , அவர்களின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் . கொள்கைக்காக கோரிக்கைக்காக சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்

சங் பரிவார்
இந்நிலையில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு என்று 3 முறை கூறி சூட்டப்பட்ட பெயரை, மாற்ற வேண்டும் என ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும். தவறாக பேசி விட்டேன் என்று அவர் கூற வேண்டும். ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்" என கூறினார். இந்த சந்திப்பின் போது மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications