"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க! இதுக்கு ஒரு கோடியா" அதிகாரிகளை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய மனோ தங்கராஜ்
அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் லெப்ட் அன்ட் ரைட் வாங்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கன்னியாகுமரி: அமைச்சர் கேட்ட கேள்விக்கு அதிகாரிகள் முறையாகப் பதிலளிக்காததால் அமைச்சர் மனோ தங்கராஜ் டென்ஷன் ஆகி அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரன்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் சீரமைப்பு பணிகளைத் தொடங்கி வைக்க அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அங்கு சென்றிருந்தார்.
அப்போது அந்த குளத்தில் இருந்து நீர் வெளியேறுவதைக் கண்டு டென்ஷனானார். அப்போது அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு டெபாசிட் கிடைக்காது.. பின்வாங்குறது ஏன்னு புரியுதா: அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சின்ன கீரன்குளம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் குளத்தின் கரையைச் சீர் செய்யும் பணிகளுக்காக சுமார் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குளத்தின் கரையைச் சரி செய்து அருகே நடைபாதையை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சீரமைப்பு பணிகளை இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது.
அமைச்சர் மனோ தங்கராஜ்
இதற்காக இன்று காலை அவர் கீரன்குளம் கிராமத்திற்குச் சென்றார். இருப்பினும், அங்கு நடந்ததோ செம ட்விஸ்ட் குளத்திற்கு அருகே அமைச்சர் வந்த போது, அதன் கரைகள் உடைந்து நீர் வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்த அமைச்சர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர், "பல ஆண்டுகளாக இருக்கும் கரை கெட்டியாக இருக்கும். அதைப் போய் உடைத்துள்ளீர்களே.. இனி எப்படி அதில் பழைய உறுதித்தன்மை இருக்கும்.
டென்ஷனான அமைச்சர்
இப்படிச் செய்தால் கரை உறுதி இல்லாமல் போய்விடுமே.. மழை நேரங்களில் கரை மிக ஈஸியாக உடைந்து ஊருக்குள் நீர் வந்துவிடும் ஆபத்து இருக்கிறது.. மோட்டாரை வைத்து நீரை எடுத்து இருக்கலாமே.. இதற்குப் போய் கரையை உடைப்பீர்களா" என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதிகாரிகள் அமைச்சரிடம் சில விளக்கங்களை அளிக்க முயன்றார்.. இருப்பினும், அவர்கள் அளித்த பதில்களால் திருப்திகரமாக இல்லாததால் அமைச்சர் மேலும் ஆவேசமானார்.
தெளிவாக பேசுங்க
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலரைக் கூப்பிட்டு இது குறித்துப் பேசினார். இந்தத் திட்டம் குறித்து அவர் கூறிய பதிலும் திருப்தி அளிக்காததால் டென்ஷனின் உச்சத்திற்குச் சென்றுவிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ், "அமைச்சரிடம் ஒன்று சொல்கிறீர்கள் என்றால்.. அதைத் தெளிவாகப் பேச வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். மேலும், இதுபோன்ற திட்டங்கள் ஏன் இங்குத் தேவையில்லை என்றும் அவர் விளக்கமாகப் பாடமெடுத்தார்.
வேறு திட்டம் இல்லையா
அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், "கீரங்குளம் ஒரு சின்ன கிராமம். இங்கு ஏற்கனவே பல வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டியுள்ளது அப்படியிருக்கும் போது எதற்காக இந்த தேவையில்லாத வேலை... யார் உங்களிடம் குளத்திற்கு அருகே நடைபாதை கேட்டது. கிராம மக்கள் நடந்து போக இடம் இல்லாமலா இருக்கிறது. இந்த பணத்தை வேறு வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாமே..
எதுக்கு இந்த திட்டம்
இதென்ன சிட்டியா குளத்திற்கு அருகே நடைப்பாதை அமைக்க.. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நகர மக்கள் தான் இப்படி இருப்பதை விரும்புவார்கள். கிராம மக்கள் இதை விரும்ப மாட்டார்கள். குளம் அதன் வடிவத்திலேயே இருக்க வேண்டும். அதில் தொந்தரவு செய்யக் கூடாது என்பதையே கிராம மக்கள் விரும்புவார்கள். அப்படியிருக்கும் போது.. நீங்கள் எதற்காக இப்படிச் செய்தீர்கள்..
ஒரு இன்ச் கூட குறையக் கூடாது
ஏற்கனவே குளம் எப்படி இருந்ததோ.. உடனடியாக குளத்தை அதேபோல மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.. நிச்சயம் அதைப் பார்க்க நான் இந்த குளத்திற்கு மீண்டும் வருவேன். அப்போது குளத்தின் அளவு ஒரு இன்ச் கூட குறைந்திருக்கக் கூடாது" என்று லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கினார். அமைச்சரின் இந்த ஆவேச பேச்சைச் சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டனர். முறையான திட்டமிடலுடன் பணியாற்றாத அதிகாரிகளை அமைச்சர் கடிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.