பாஜகவைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு! அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
கன்னியாகுமரி: பாஜகவைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு உள்ளதாக அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜகவில் உள்ள நபர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை அண்ணாமலை முதலில் தடுக்கட்டும் பிறகு மற்றதை பேசட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக முதலமைச்சர் தலைமையில் 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை எடுத்தார். கஞ்சா பயிரிடப்படாத பூமியாக உள்ளது தமிழ்நாடு.

பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுப் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம் இருந்தால் உடனடியாகத் தடுக்கப்பட்டு, காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தந்துள்ளார். அப்படிப்பட்ட ஆட்சி அப்போது நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துத் தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க. அகில இந்தியளவிலேயே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக இருப்பது அவரது குஜராத்தில்தான். இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர்தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காகப் பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
விமான நிலையம், துறைமுகங்களையெல்லாம் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு. தனியாருக்குத் தாரைவார்த்தால் கட்டுப்பாடு தனியாரிடத்தில்தான் இருக்கும், அதற்குத்தான் தனியார் மயத்தை எதிர்க்கிறோம். தனியாரிடமிருந்து வாங்கியது அன்றைய ஒன்றிய அரசு, தனியாருக்கு இன்றைய ஒன்றிய அரசு கொடுப்பதற்குப் பெயர் மோடி பார்முலாவா? மோடியிசமா?
2019-இல் 11,418 கிலோ, 2020-இல் 15,144 கிலோ, 2021-இல் 20,431 கிலோ,
2022-இல் 28,381 கிலோ, 2023-இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2022-இல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80% வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர். 2023-இல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.
தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
பாஜகவைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது. அவர்கள் குறித்த பட்டியல்...
1. சரவணன், உறுப்பினர்
2. ராஜேஷ், சென்னை 109-ஆவது வட்ட தலைவர்
3. விஜய நாராயணன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்
4. விஜயலட்சுமி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர்
5. மணிகண்டன், தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர்
6. ஆனந்த ராஜேஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி./ எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர்
7. ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர்
8. குமார் எ குணசீலன், உறுப்பினர்
9. மணிகண்டன், உறுப்பினர்
10. லிவிங்கோ அடைக்கலராஜ், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர்
11. சிதம்பரம் எ குட்டி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர்
12. ராஜா, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர்
13. சத்யா எ சத்யராஜ், உறுப்பினர்
14. காசிராஜன், மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர்
அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க.வில் உள்ள நபர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதைப் பார்க்கட்டும்.
போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.
இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டுப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications