PM Modi: திட்டமிட்டபடி நாளை குமரி வருகிறார் மோடி... பாஜக நிகழ்ச்சி மட்டும் ரத்து!
குமரி: எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
நாளைய நிகழ்ச்சியில் நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அரசியல் நிகழ்ச்சி ரத்து
இதையடுத்து, அரசு நிகழ்ச்சி அல்லாத மற்றொரு மேடையில் தமிழக பாஜக சார்பில் அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எல்லையில் போர் பதற்றம் நிலவும் நிலையில், அரசியல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
இதற்கிடையே இன்றும், நாளையும் கடலுக்கு மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல்வழி பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சந்தேகப்படும்படி அந்நிய நாட்டுப் படகுகளின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் உதவும் வகையில் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களையும் உடனடியாக திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருப்புக் கொடி
கன்னியாகுமரி வருகையை தொடர்ந்து வருகிற 6ம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தர உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அரசு நிகழ்ச்சியை தவிர மற்ற எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படுவது உறுதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.