கன்னியாகுமரியில் மையம் கொள்ளும் ராகுல் புயல்! சுற்றுலாப் பயணிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடங்குகிறார். இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். இங்குள்ள கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குடும்பத்துடன் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் கன்னியாகுமரிக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருவது வழக்கம்.

சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. மேலுரும், கோடை விடுமுறை சீசன் காலங்களிலும், உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம். கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராகுல் நடை பயணம்
இந்நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில், கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 12 மாநிலங்கள் வழியாக, சுமார் 3,500 கிலோமீட்டர் தூரம் 5 மாதங்களுக்கு அவர் அரசியல் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கொண்டும் செல்லும் வகையிலும் இந்த யாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதற்காக கன்னியாகுமரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தனது நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளார்.

பொதுக்கூட்டம்
கன்னியாகுமரியில் இன்று மாலை நடைபெறும் தொடக்கவிழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கடல் பகுதிகள் பீச் பகுதிகள் முழுவதும் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது -

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகளில் 2500 போலீசார் ஈடுபடுத்த பட்டு உள்ளனர், மேலும், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications