குமரியில் கொட்டித்தீர்த்த கனமழை - திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கன்னியாகுமரி: குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளநீரினால் சிறுவர் நீச்சல் குளம் தடுப்பு வேலிகள் , சிறுவர் பூங்கா பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயின் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலத்தின் பிரதான அருவியான பேரருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை மையம் கணித்தது போல கன்னியாகுமரியில் தொடர்ந்து 3 நாட்களாக சூறை காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வெள்ள நீர் பெருக்கடுத்துள்ளதால் குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல கோவில்களிலும் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணையில் இருந்தும் ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளில் தண்ணீர் புகுந்து, விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் வேறு பகுதிகளில் தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கனமழையால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளநீரினால் சிறுவர் நீச்சல் குளம் தடுப்பு வேலிகள் , சிறுவர் பூங்கா பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
திற்பரப்பு நீர்வீழ்ச்சி குமரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று. இந்த அருவியில் விழும் தண்ணீர் மூலிகை நிறைந்த காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் இந்த அருவிகளில் குளிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் யாரும் திற்பரப்பு அருவிக்கு வருகை தரவில்லை.
திற்பரப்பு அருவி தண்ணீருக்கு கால்களிலுள்ள பித்தவெடிப்பு, மற்ற தோல் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சொல்வதால் மணிக்கணக்கில் மக்களும் குளித்து மகிழ்வார்கள். குழந்தைகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைச்சூழல் நிறைந்துள்ள திற்பரப்பு அருவி தற்போது வெள்ளம் சூழ்ந்த பகுதியாகக் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications