கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமாரி கேரளாவில் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எல்லைப் பகுதியில் இதுவரை போதிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதிப்பு காரணமாக 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நோய் பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கேரளா நோய் பரவல்
அதேசமயம், கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஷிகெல்லா தொற்று தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க, கேரள எல்லையை ஒட்டியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி
கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தேவையான சுகாதார கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் எந்தவித சுகாதார பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
களியக்காவிளை
கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல எந்த கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. பயணிகளின் உடல்நிலை பரிசோதனை, வெப்பநிலை கண்காணிப்பு அல்லது மருத்துவ ஆய்வு போன்ற எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கேரளாவில் பரவி வரும் ஷிகெல்லா தொற்று தமிழகத்திற்கும் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஷிகெல்லா
ஷிகெல்லா என்பது குடல்பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். இது பெரும்பாலும் மாசுபட்ட குடிநீர், சுகாதாரமற்ற உணவு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவக்கூடியது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த தொற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எல்லைப் பகுதிகள்
கேரளாவில் நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், களியக்காவிளை உள்ளிட்ட தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை கண்காணிப்பை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவசர மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோய் பரவல்
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த சுகாதார அவசரநிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நோய் பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications