சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்
Recommended Video
கன்னியாகுமரி : சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் என கூறி பித்தளை குடத்தை காட்டி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த பிரபல ரவுடி பிரபு உட்பட 3 பேரை கைது செய்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 57 பவுன் நகை மற்றும் 14 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர்அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் மேலகிருஷ்ணன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபு தனக்கு இரிடியம் விற்பதாக கூறி 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் பிரபுவை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்ததில், ஓட்டல் மற்றும் சொந்தமாக டேங்கர் லாரி வைத்து வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வரும் அரவிந்த் சம்பவத்தன்று அப்பகுதியில் டீ குடித்து கொண்டிருக்கும் போது இரண்டு பேர் அவரிடம் வந்து பேச்சு கொடுத்து இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகி தொழில் சிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
முன்பணம் ரூ.25 ஆயிரம்
இதை நம்பி தனக்கும் அந்த இரிடியம் வேண்டும் என்று கூற அந்த இரண்டு நபர்கள் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்த கண்ணன், பிரபுவிடம் இருப்பதாகவும் அதற்கு முன் பணமாக ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அரவிந்த், கண்ணன் பிரபுவிடம் நேரில் சந்தித்து முன்பணம் ரூ 25 ஆயிரம் கொடுத்த பிறகு அஞ்சுகிராமம் அருகே உள்ள ஓட்டலுக்கு இரிடியம் மாதிரியை காட்டுவதாக கூறி அழைத்து சென்றனர்.
பித்தளை குடம்
அவர்களுடன் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ், கேரளா மாநிலம் குமி வண்டி பெரியாரை சேர்ந்த நாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர். இவர்கள் அரவிந்திடம் ஒரு பித்தளை குடத்தை காண்பித்து, உள்ளே இரிடியம் இருப்பதாக கையை உள்ளே விட சொல்ல அரவிந்த்துக்கு ஒருவித அதிர்வு ஏற்பட்டு அவர் உள்ளே இரிடியம் இருப்பதாக நம்பினார்.
காவல்நிலையத்தில் புகார்
உடனே அவர்களிடம் அரவிந்த் குடத்தை கேட்க இந்த குடம் வேறு ஒருவருக்கு, அடுத்த குடம் உனக்கு என கூறி மேலும் ரூ 25 ஆயிரத்தை முன்பணமாக பெற்றனர். பின்னர் அரவிந்த் சில நாட்கள் கழித்து அவர்களிடம் இரிடியம் கேட்டபோது ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்தி கடைசியில் செல் போனிலும் தொடர்பு கொள்ளாத நிலைக்கு சென்று விட்டனர். பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பல கோடி ரூபாய் மோசடி
அதனை தொடர்ந்து சிறப்பு கிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடித்து விசாரித்து வருகின்றனர். குமுளியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து இரிடியம் என கூறி பித்தளை குடத்தை காட்டி பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
நகை, பணம் பறிமுதல்
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 57 பவுன் தங்க நகைகள் மற்றும் 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது . விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களிடமிருந்து வெளிவரலாம் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.