கன்னியாகுமரி மருமகன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவு.. அதை பார்த்து ஆடிப்போன மாமியார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியில் வரதட்சணையாக பணம் கொடுக்காததால் மாமியார் குறித்து மருமகன் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த மிடாலக்காடு பகுதியை சேர்ந்த மாமியார், தனது மருமகன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவினை பற்றி புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வரதட்சணை கேட்பது சட்டப்படி தவறு என்றாலும், நடைமுறையில் அப்படி இருப்பது இல்லை.. பெண் வீட்டில் தங்களால் முடிந்த தங்க நகை, பணம், பாத்திரங்களை வழங்குகிறார்கள். சிலர் தங்கள் மகளுக்காக ரொக்க பணமும் அளிப்பது உண்டு. ஆனால் சில வீடுகளில் கட்டாயப்படுத்தி வரதட்சணை கேட்பதும் நடக்கிறது. சில மருமகன்கள் தங்கள் மாமனார், மாமியாரை பணம் காய்க்கும் மரமாக நினைத்து பணம் பறிப்பது நடக்கிறது. பணம் தராவிட்டால், மனைவியை கொடுமைப்படுத்துவதும் நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கன்னியாகுமரி திக்கணங்கோடு அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்த 59 வயதாகும் பெண் ஒருவர் தனது மகளை அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கல்யாணம் செய்து கொடுத்தார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அழகிய மண்டபம் பகுதி இளைஞர், வேலைக்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடும்ப செலவுகளை எதிர்கொள்ள மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கிவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அவரது மனைவியும் ஆரம்பத்தில் குடும்ப கஷ்டத்திற்காக, கணவனின் பேச்சை கேட்டு தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வந்தார். நாட்கள் செல்ல செல்ல இதேபோன்ற கொடுமை அதிகரித்து கொண்டே சென்றதாம். இதனை தாங்க முடியாத மனைவி ஒரு கட்டத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு வாலிபர் அங்கு சென்றும் மாமியாரிடம் வரதட்சணை பணம் கேட்டு தகராறு செய்து வந்தாராம்.
ஒரு கட்டத்தில் மாமியார் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், மாமியாரை காணவில்லை என அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பினார். இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, இதை பார்த்த பலரும் மாமியாரிடம் விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதனால், மாமியாரும், மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாமியார் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வரதட்சணையாக பணம் கொடுக்காததால் மாமியாரை காணவில்லை என சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பரப்பிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications