தபால் துறையின் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்.. 2 நாளில் முடியப்போகும் சூப்பர் திட்டம்.. விவரம்
கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டத்தில் 13 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்று தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறினார். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும் என்றும் கூறினார்.
கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கான ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக சேர்ந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு திட்டம்
இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.
7.5 சதவீதம் வட்டி
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதி தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும்.
கணக்கு முடித்தல்
கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது பாதுகாவலர்கள் மரணமடைந்தாலோ அல்லது தீவிர மருத்துவக் காரணங்களாக இருந்தாலும் இந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முடித்துக்கொள்ளும் பட்சத்தில் வட்டிவிகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும்.
2 நாள் தான் இருக்கு
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 31-ந் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ளது. மேலும் வருகிற 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் நாளைக்குள் (29-ந்தேதி) இந்த வாய்ப்பை அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்பெறலாம். இதற்காக அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications