ஆன்லைன் விளையாட்டில் கடன்.. அம்மா என்னை தேட வேண்டாம்.. வீடியோ பதிவிட்டு வீட்டை விட்டு சென்ற சிறுவன்
கரூர்: கரூரில் ஆன்லைன் கேம் விளையாட வாங்கிய கடனை பற்றி வீட்டில் தெரிவிப்பதாக உடன் விளையாடிய அடையாளம் தெரியாத சிறுவர்கள் மிரட்டியதால் வீட்டை விட்டு சென்ற 15 வயது சிறுவனை போலீஸார் மீட்டுள்ளனர்.
Recommended Video
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரில் வசிப்பவர் சேகர். மருந்துக் கடை நடத்தி வரும் இவருக்கு மனைவியும், 2 மகள்களும், மணி மாதவன் என்கின்ற 15 வயது மகனும் உள்ளனர். மணி மாதவன் துளசி கொடும்பு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆன் லைன் விளையாட்டின் மீது கொண்ட அதிக ஆர்வம் காரணமாக மணி மாதவன் அம்மா செல்போனில் ஃப்ரி பயர் விளையாட்டை பதிவிறக்கம் செய்து அவ்வப்போது விளையாடி வந்துள்ளார்.

மாணவர்கள்
கொரோனா காரணமாக பள்ளிகளை திறக்காமல் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்காக மணி மாதவனுக்கு அவனது பெற்றோர் ஆன்ராய்ட் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆன் லைன் வகுப்புகள் கவனித்த நேரம் போக மீதமுள்ள நேரங்களில் ஃப்ரி பயர் ஆன் லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து அதிக நேரம் விளையாடி வந்துள்ளார்.

3 கணக்குகள்
குழு விளையாட்டு என்பதால் முன்பின் அறிமுகம் இல்லாத சிறுவர்களுடன் இணைந்து அந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார். 3-க்கும் மேற்பட்ட கணக்கை துவங்கி விளையாடி வந்துள்ள அவர் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தன்னுடன் விளையாடும் சக அடையாளம் தெரியாத சிறுவர்களுடன், தனது செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடி இருக்கிறார்.

கடனுக்கு ஈடு
அவற்றை திரும்ப செலுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுமார் 4500 பாய்ண்ட்ஸ்களை கடனாக பெற்று விளையாடி உள்ளார். அவற்றை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடனை ஈடுகட்ட தான் பயன்படுத்திய 2 கணக்குகளை அந்த சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார் மணி மாதவன்.

பாஸ்வேர்ட்
இதற்கிடையில் வீட்டில் இருந்த அவனது பெற்றோர் ஆன் லைன் விளையாட்டை அதிக நேரம் விளையாடுகிறாய் என எச்சரித்ததுடன், மிரட்டியும் வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் மணி மாதவன் விளையாடியதால் பெற்றோர்கள் செல்போனை வாங்கி அதில் அனைத்து ஆப்களுக்கும் பாஸ்வேர்ட் போட்டதுடன், போன் வந்தால் மட்டும் பேசிக் கொள்ளும்படி கையில் கொடுத்து வைத்துள்ளனர்.

சிறுவர்கள்
இந்த நிலையில் 4500 பாயிண்ட்ஸ் கடன் கொடுத்த 3 சிறுவர்கள் மணி மாதவனை மிரட்டி தன்னுடைய பாய்ண்ட்ஸ்களை திரும்ப, திரும்ப கேட்டுள்ளனர். மணி மாதவனால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கோபமடைந்த குழு சிறுவர்கள் 3 பேர் உங்க வீட்டிற்கு போன் செய்து நீ கடன் வாங்கி விளையாடியதை சொல்லி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

100 ரூபாய்
இதனால் குழு சிறுவர்கள் பேசிய செல்போன் எண்களை ப்ளாக் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட செல்போனில் கேமராவை ஆன் செய்து அம்மா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உன்னை விட்டு செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என வீடியோ பதிவு செய்து வைத்து வீட்டு, வீட்டில் இருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6 ம் தேதி இரவு 7.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

திருச்சி பஸ் ஸ்டான்ட்
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. மினி பேருந்தில் ஏறி கரூர் பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் ராமானூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலையம் சென்றுள்ளார். மீண்டும் திருச்சி செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருச்சி சென்று விட்டார்.

சத்திரம் பேருந்து நிலையம்
சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரவு, பகலாக சுற்றி திரிந்துள்ளார். பயண கட்டணம் போக மீதம் இருந்த 30 ரூபாய்க்கு பூரி செட் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் சுற்றியுள்ளார். சிலர் தன்னை பற்றி கேட்டபோது எனக்கு யாரும் இல்லை எனக் கூறி சுற்றி திரிந்த நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது ஆட்டோவில் தூங்கிக் கொள்ளும்படி ஆட்டோ ஸ்டேண்டில் தூங்க இடம் கொடுத்துள்ளார்.

பானிப்பூரி
சிறிது நேரத்தில் பசி தாங்காமல் அருகில் இருந்த பானிப்பூரி கடைக்காரரிடம் சென்று தனக்கு பசிப்பதாகவும், கையில் காசில்லை எனக் கூறி பானிபூரி சாப்பிட கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுக்க அருகில் இருந்த ஒரு நபர் சிறுவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவனிடம் ஆறுதலாக பேசி பானி பூரி சாப்பிட வைத்து, செலவிற்கு 100 ரூபாய் பணம் கொடுத்து அவனுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

தான்தோன்றிமலை
பின்பு, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் ஏற்றி திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்கிடையில் விளையாட போன சிறுவன் வீட்டிற்கு வராததால் அவனது செல்போனை எடுத்து பார்த்துள்ளனர். மகன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சமூகவலைதளங்கள்
மேலும், தனது உறவினர்கள், நண்பர்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பெற்றோரும், உறவினர்களும் தேடி அலைந்தும் கிடைக்காததால் சோகத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பாக சிறுவன் மணி மாதவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

3 சிறுவர்கள் மிரட்டல்
சிறுவன் மாயமான தினத்தின் அடுத்த நாள்
7ம் தேதி இரவு திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசாருடன் சென்று பெற்றோர்கள் மீட்டு வந்துள்ளனர். சிறுவனுக்கு மனநல சிகிச்சை கொடுக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சிறுவனை மிரட்டிய 3 சிறுவர்களை தாந்தோன்றிமலை போலீசார் வரவழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications