கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
கரூர்: சட்டசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வைத்தது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். கரூரில் திமுகவின் வெற்றியை செந்தில் பாலாஜி உறுதி செய்துவிட்டதால், அவருக்கு கோவை மாவட்டத்தில் பொறுப்பு கொடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கரூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜியை இம்முறை கோவைக்கு ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார். கடந்த முறை கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. இம்முறை சரி பாதி தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதி ஸ்டாலின் குறியாக உள்ளார்.

அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூரில் இருந்து கோவையில் போட்டியிட வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் கரூரில் இருந்து செந்தில் பாலாஜி ஓடிவிட்டதாக விமர்சனங்கள் முன் வைத்தன. இது செந்தில் பாலாஜிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கரூரை பொறுத்தவரைக்கும் எனக்கு எந்த கவலையும் இல்லை.. ஏன் என்று உங்களுக்கே தெரியும்.. செந்தில் பாலாஜியின் மாவட்டம் இது.. 100% வெற்றி உறுதி.. கரூரில் திமுகவின் வெற்றியை எப்போதோ உறுதி செய்துவிட்டதால், அவருக்கு கோவை மாவட்டத்தில் பொறுப்பு கொடுத்துள்ளேன். நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. அவர் புகுந்த வீடு தான் கோவை.
பிறந்த வீடு எப்போதும் கரூர் தான். அதனை எப்போதும் மறக்க மாட்டார். பல சோதனைகளை கடந்து சாதனை படைப்பவர் செந்தில் பாலாஜி. இந்த முறை கரூர், கோவை இரண்டுமே நம் வசம் தான்.. தமிழ்நாடு மொத்தமும் நாம தான் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு புலனாய்வு புலி என்று நினைத்து காமெடி செய்கிறார்.
வாஜ்பாய் உடன் நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர, உங்களை போல் தமிழ்நாட்டை அடகு வைக்கவில்லை. நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்த போது திமுக ஆட்சி கலைஞரிடம் தான் இருந்தது. ஆனால் இப்போது அதிமுக அமித்ஷாவிடம் தான் இருக்கிறது. புலிகேசி படத்தில் சொல்வதை போல், மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து கொண்டே இருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications