பணியே முடியவில்லை! பணம் செட்டில்! சிக்கலில் அதிமுக மாஜி அமைச்சர் ஆதரவாளர்கள்! கரூரில் புதிய புகார்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் டெண்டர் எடுத்த பணிகளை முடிப்பதற்கு முன்னரே, இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பில் பணம் செட்டில் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
புகாருக்கு உள்ளாகியிருக்கும் சக்தி இன்ஜினியரிங் ஒப்பந்ததாரர் மணிவாசகம் மற்றும் பழனியப்பா இன்ஜினியரிங் நிறுவன அதிபர் விபி ஆகிய இருவரும் அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவித்திடுக! நீதித்துறை விழாவில் முதல்வர் முன்வைத்த 3 கோரிக்கைகள்!
இதனிடையே இவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்கள் கட்டுமான சங்கத்தினர்.
கரூர் மாவட்டம்
கரூருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அப்படி என்ன தான் பொருத்தமோ தெரியவில்லை, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்த சூழலில், இப்போது அவரது ஆதரவு ஒப்பந்ததாரர்கள் இருவர் மீதே புகார் எழுந்துள்ளது. அதாவது மார்ச் மாதமே பட்டியல் தொகையை பெற்றுக்கொண்டு இன்று வரை டெண்டர் எடுத்த பணிகளை முடிக்காமல் இருக்கிறார்கள் என்பது தான் அவர்கள் மீது எழுந்துள்ள புகாராகும்.
புகார் கடிதம்
கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து பணிகள் முடிவுற்றதாக கூறி மார்ச் மாதம் பட்டியல் தொகை பெறப்பட்டதாக புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கட்டுமான சங்கத்தினர், கரூர் மாவட்டம் நெரூர் -தளவாபாளையம் இடையே சக்தி இன்ஜினியரிங் சார்பில் இன்றும் பணி நடப்பதாக அதற்கான புகைப்படத்தையும் புகார் கடிதத்துடன் இணைத்திருக்கின்றனர். இதேபோல் ஒப்பந்ததாரர் பழனிசாமி டெண்டர் எடுத்த மணப்பாறை -குஜிலியம்பாறை அணுகுசாலை அமைப்பதற்கான பணி, இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயம் வேண்டும்
ஆனால் அதற்குள் அந்தப் பணிகளுக்கான பணம் செட்டில் செய்யப்பட்டிருப்பது தான்இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டேயாகும். தங்களுக்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா எனக் கேள்வி எழுப்பும் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் தரப்பு, இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்மட்ட அளவில் கோரிக்கை அளித்து வருகிறது. இதனிடையே கரூரில் நெடுஞ்சாலைத்துறையை மையமாக வைத்து அடுத்தடுத்து எழுந்துள்ள புகார்கள் அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கும் சென்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஜி அமைச்சர்
இதனிடையே கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கல் எறிந்துள்ளதாகவும், நெடுஞ்சாலைத்துறை தரப்பில் விசாரணை நடைபெற்றால் அவரது ஆதரவு ஒப்பந்ததாரர்கள் தான் அதிகளவு சிக்கப்போகிறார்கள் எனவும் திமுகவினர் தெம்பாக கூறி வருகின்றனர்.