ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவது உரிமை! அது புதிய கல்விக் கொள்கையல்ல..குலக்கல்வி -கி.வீரமணி பேச்சு
கரூர்: ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திராவிட கழகத் தலைவர் வீரமணி தலைமையில் இதுவரை 31 மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து திராவிட கழகத் தலைவர் வீரமணி உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து இன்று கரூரில் உள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வை எதிர்த்து நான் தொடங்கியுள்ள் பிரச்சாரப் பயணம் மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. வருகிற 25 ந் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது சுற்று பயணத்தை முடித்து வைக்கிறார்.
இப்போது மத்திய அரசு கொண்டு வருவது புதிய கல்விக் கொள்கை அல்ல. அது பழைய கல்வி கொள்கையான குலக்கல்வி தான் அப்படி கொண்டு வருகின்றனர். இந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இட ஒதுக்கீடு, சமூக நீதி, பெண் கல்வி இவைகள் எதுவும் அதில் இல்லை. மூன்றாவதாக இந்தி மொழியை மறைமுகமாக கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இணைப்பு மொழி இந்திதான் என்று வெளிப்படையாக அமித்ஷா பேசுகிறார்.
பொது மக்கள் ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உரிமை உள்ளது. எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கறுப்புக்கொடி காட்டுவது பொது மக்களின் ஜனநாயக உரிமை. ஆனால், ஆளுநர் பயணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்." என்று தெரிவித்தார்.