நம்பர்.1 கரூர்.. நம்பர். 2 கோவை.. நோட் பண்ணிக்குங்க.. அப்புறம் புலம்பக்கூடாது
கரூர்: தேர்தல் நடத்தை விதிமீறல்களில் கரூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்திவருகிறது. அதனுடன் 'சி.விஜில்' எனும் ஆப் ஒன்றை அறிமுக செய்துள்ளது. அதில், தங்கள் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சியினர் செயல்பட்டால் மக்கள் அதனை பதிவு செய்து புகாராக தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று (மார்ச்.24) வரை பதிவான விதிமீறல்கள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களில் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
'சி.விஜில்' ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்களில், கரூரில் இருந்து மட்டும் 487 புகார்கள் குவிந்துள்ளனவாம். அதில் 440 புகார்கள் உண்மையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை கோவை பிடித்துள்ளது.
கோவையில் இருந்து இதுவரை 365 புகார்கள் வந்துள்ளனவாம். அதில் 284 புகார்கள் உண்மையானவை. அதேபோல் இதுவரை தமிழகத்தில் ரூ. 265 கோடி அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.