எடப்பாடிக்கு வருவது கட்சிக் கூட்டம்.. விஜய்யை பார்க்க எல்லோரும் வருவார்கள்.. கரூர் நீதிபதி கருத்து
கரூர்: "எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம். விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்" என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் தவெக தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. கூட்ட நெரிசல் வழக்கில், கரூர் நீதிமன்றத்தில் தவெக தரப்பினர் வாதம் வைத்தபோது, 1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் ஹவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை. சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் என்று கணித்தோம் என தவெக தரப்பு வாதம் வைத்தது.
விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. லைட் ஹவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையில் உண்மை வெளிவரும் என காவல்துறை வாதம் வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தவெக தரப்பிற்கு நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். "உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு" என நீதிபதி தெரிவித்துள்ளார்.
"விஜய் கரூர் கூட்டம் நடந்த இடத்திற்கு, அதற்கு முந்தைய நாள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார். 15,000 பேர் வருவார்கள் என்று சொன்னார்கள். எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு கூறியபடி 15,000 பேர் வந்தார்கள். எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதிமுக பிரச்சாரம் நடந்தபோது அதிக வாகனங்கள் வந்தன. அதிக வாகனங்கள் வந்ததால் அந்த இடத்தை விஜய் பிரச்சாரத்துக்கு வழங்கினோம்." என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தவெக தரப்பினரிடம், "மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை?" என நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என காவலர்களிடம் கூறினோம் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி விஜய் கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு தவெக தரப்பு, சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம் எனத் தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி, "வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள். விஜய்யை பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்; அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டும். தவெக கேட்ட 3 இடமுமே போதுமானது அல்ல. அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம். விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்" என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
"எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று எங்களுக்குத்தான் அதிக வருத்தம். இதனால்தான் தவெக தலைவர் விஜய் வெளியே வரவில்லை என தவெக தரப்பினர் வாதம் வைத்துள்ளனர். கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications