எமனாக வந்த இரும்பு தூண்.. கரூரில் காரில் சென்ற புதுமண தம்பதி உயிரிழப்பு
கரூர்: கரூர் அருகே காரில் சென்ற புதுமண தம்பதியினர் சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தூணில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சந்தோஷ் வயது 26 இவர் மதுரை அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி வயது 21 என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இரும்பு தூண்
நேற்று இரவு இவர்கள் மதுரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்னோவா காரில் சென்றனர். காரை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார். கரூர் மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வரும் பொழுது சாலையோரத்தில் இருந்த அறிவிப்பு பலகை தாங்கியிருந்த இரும்பு தூண் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

போலீஸ் வழக்கு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் மற்றும் மகாலட்சுமி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிர்காக்கும் பலூன்
போலீசாரின் விசாரணையில் இவர்கள் வந்த காரில் இரும்பு தூணில் மோதிய போது காரில் இருந்த உயிர் காக்கும் பலூன் விரிந்தது அதேசமயம் காரின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த 2 சிலிண்டர்கள் எதிர்பாராதவிதமாக இவர்கள் இருவரின் தலைப்பகுதியில் வேகமாக மோதியதில் தம்பதி இருவரின் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

3 மாதத்தில் பலி
உயிர் காக்கு பலூன் விரிந்தும், சிலிண்டரில் மோதி தம்பதி இறந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் எப்படி புதுமண தம்பதி உயிரிழந்தார்கள் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் கூறினர். திருமணம் ஆன மூன்று மாதத்தில் தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications