சர்ச்சையை கிளப்பிய சுயேச்சைகள்...சைதை துரைசாமி, அண்ணாமலை வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்பு
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது. அதேபோல சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ப
கரூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவும் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை விறுவிறுப்பாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நிறைவடைந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான விளக்கம் அளித்த பிறகு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருமானவரி பற்றிய தகவலை தெரிவிக்காமல் இருப்பதால் சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.
வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் திக் திக் மனநிலையில் இருந்த வேட்பாளர்கள் பலரும், பரிசீலனைக்குப் பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் பலரும் நிம்மதி பெறுமூச்சு விட்டனர்.
இதே போல மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனுவும் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.