கரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்
கரூர்: கரூர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகள், 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணிகள் ஆகியவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீர் ஆதாரங்களை தூர் வார பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல் கட்டமாக வாய்க்கால்கள், ஏரிகள் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் தொடங்கின. இவற்றை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 1 கோடி மரங்களை கரூர் மாவட்டத்தில் நடும் திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
கரூரில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 255 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டி ,பேட்டரி வீல் சேர், முடநீக்கு சாதனங்கள், தாங்கு கட்டைகள், தையல் இயந்திரம் என ரூபாய் 37,80,000 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் அம்மா குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இவை சீர்செய்யப்பட்டு முந்தைய எண்ணிக்கையைவிட அதிக அளவில் தயாரிக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடுவது என இலக்கு வைத்துள்ளோம். அரசு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் மரக்கன்றுகளை நடுவது என தீர்மானித்துள்ளோம். தமிழகம் முழுவதும் ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகக் குறைந்த விலைக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications