கரூர் போகணும்.. அனுமதி கொடுங்க.. டிஜிபியிடம் நேரடியாக சென்ற விஜய் மனு
கரூர்: தவெக விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தவெகவை தவிர மற்ற அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெற்று சுமார் 2 வாரங்கள் ஆகப்போகும் நிலையில் நேற்று விஜய் அந்த மக்களிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் கரூர் சென்று மக்களை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு விஜய் சார்பில் டிஜிபியிடம் இன்று நேரில் மனு அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

கரூர் செல்லாத விஜய்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெக தரப்பில் புகார் சொல்லப்பட்டது. மறுபக்கம் தவெக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவில்லை என்ற புகாரும் எழுந்தது. சம்பவம் நடைபெற்று சுமார் 11 நாட்களாகிவிட்டன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சியினரும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தவெகவில் விஜய் அல்லது அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கூட கரூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இது அரசியல் ரீதியாக பெரும் விமர்சனமாகியுள்ளது. விஜய் வீட்டுக்குள்ளேயே முடங்கி வீடியோ மூலம் முதலமைச்சருக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.
டிஜிபியிடம் மனு
இந்த நடவடிக்கையை விஜய் ரசிகர்களை எதிர்த்து வருகிறார்கள். விமர்சனம் அதிகரித்து வரும் நிலையில், விஜய் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று ஆறுதல் கூறினார். அப்போது, எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. என்று வருத்தப்பட்டதுடன் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற தினமே கரூர் செல்ல விஜய் முயற்சி செய்த்தாகவும், காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் தவெகவினர் கூறினர். விஜய் கரூர் சென்று மக்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு கேட்டு ஏற்கனவே, டிஜிபியிடம் ஆன்லைன் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் சார்பில் தவெகவினர் இன்று நேரடியாக டிஜிபி அலுவலகம் சென்று, கரூர் சென்று மக்களை சந்திப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
தவெக வழக்கறிஞர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் விஜய் சார்பாக டிஜிபியிடம் அனுமதி கேட்டுள்ளார். இதேபோல Y பிரிவு தலைமை அலுவலகத்திலும் விஜய் சார்பில் பாதுகாப்பு கோரி அனுமதி கேட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications