இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
கரூர்: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் சிட்டிங் எம்பி ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இன்று பிரசாரத்துக்கு சென்ற ஜோதிமணியிடம் ‛இத்தனை நாளா எங்க போனீங்க? என கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகளை திமுக வழங்கி உள்ளது. அதில் ஒரு தொகுதி தான் கரூர். இந்த தொகுதி கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கரூர் எம்பியாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்ளார். வரும் தேர்தலிலும் அவரே காங்கிரஸ் சார்பில் கரூரில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கேஆர்எல் தங்கவேல், பாஜகவில் விவி செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் ஆர் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் ஜோதிமணி இன்று கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பிரசாரம் செய்தார். பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த சமயத்தில் கையில் ஆரத்தியுடன் நின்ற பெண் ஒருவர் ஜோதிமணியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
அதாவது கடந்த தேர்தலில் ஓட்டு கேட்டபோது உங்களை பார்த்தோம். அதன்பிறகு இப்போது மீண்டும் ஓட்டு கேட்க வந்ததால் உங்களை பார்க்கிறோம். இவ்வளவு நாள் ஏன் வரவில்லை? ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். இதையடுத்து ஜோதிமணி அருகே நின்ற திமுக நிர்வாகிகள் அப்புறமாக அதனை பேசி கொள்ளலாம் எனக்கூறி ஜோதிமணியை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தொகுதியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஜோதிமணி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் லட்சத்து 95 ஆயிரத்து 697 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பித்துறை 2 லட்சத்து 75 ஆயிரத்து 151 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் ஜோதிமணி 4,20,546 ஓட்டுகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றார். தற்போது அவர் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் அவர் வெல்வாரா? என்பது ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4ம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications