சொந்த கொடி போச்சே.. தவெக கொடி காட்றது எவ்வளவு கேவலம்.. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த புகழேந்தி
கிருஷ்ணகிரி: திமுகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அதிமுக - தவெக கூட்டணி அமைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. எடப்பாடி பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி பறந்தது சமூகவலைதளங்களில் வைரலானது. இதைப்பற்றி விமர்சித்துள்ள பெங்களூர் புகழேந்தி, சொந்தக் கட்சிக்காரனை விட்டே அடுத்த கொடியை பிடிக்க சொல்வது அவமானம் என்று பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிட்டது. திமுக கூட்டணி கடந்த சில தேர்தல்களை போலவே இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் பெரியளவுக்கு அரசியல் கட்சிகள் இல்லை. திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுக - பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்பு வரை தவெக தலைவர் விஜய் திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளையும் விமர்சித்து வந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெகவுடன் அதிமுக, பாஜக நெருக்கம் காட்டி வருகிறது. விஜய்யுடன் பாஜக தேசிய தலைவர்கள் பேசியதாக தகவல் வெளியானது. கரூர் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட பாஜக எம்பிக்கள் குழுவும், தமிழ்நாடு அரசைத்தான் குற்றம் சாட்டியிருந்தனர்.
எடப்பாடி மீது விமர்சனம்
மறுபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவுக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவான கருத்தையும் முன் வைத்து வருகிறார். நாமக்கலில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் வந்ததை பார்த்து, கொடி பறக்குதா ஸ்டாலின் அவர்களே என்று எடப்பாடி பழனிசாமி மிகவும் உற்சாக குரலில் பேசியிருந்தார். இதுவும் அதிமுகவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எது கொடி தெரியுமா. வானுயர்ந்து பறக்கும் வள்ளல் அண்ணா கொடி அல்ல. அண்ணா உருவம் பதித்த கொடி அல்ல. மேடையில் நின்று கொண்டு, பாருங்க அந்தக் கொடி பறக்குது என்று விஜய் கட்சியின் தவெக கொடியை காட்டுகிறார். இது மாதிரி கேடு கெட்ட அரசியலை பார்த்ததுண்டா.
அவமானம்
அப்போது உங்கள் கட்சி கொடி என்ன ஆனது. சொந்த கொடி போச்சே சார். ஊரில் உள்ள கட்சி கொடியை எல்லாம் காட்டுவது எவ்வளவு கேவலம். அதையும் சொந்தக் கட்சிக்காரனை விட்டே அடுத்த கொடியை பிடிக்க சொல்கிறீர்கள். அவமானநிலை ஏற்பட்டுள்ளது. பழனிசாமி உங்களுக்கு நான் சிறந்த அறிவுரை தருகிறேன். உங்கள் சகாக்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் விஜய் உள்ள பனைருயூக்கு ஊர்வலமாக போங்கள்.
நாதஸ்வரம், மேளம் எல்லாம் வாசித்தபடி போங்கள். அங்கு நீங்கள் போனாலும் அவர் யாருக்கும் கிடைக்க மாட்டார். வருவதெல்லாம் புரளியான செய்தி. நேராக சென்று கதவு முன்பு காலில் விழுந்துவிடுங்கள். இம்சை அரசன் புலிகேசி படத்தில் வடிவேலு காலில் விழுவது போல வெள்ளைக் கொடி காட்டி சரண்டராகிவிடுங்கள். அதேபோல கூட்டணி வேண்டும் என்று கேளுங்கள். அப்போதாவது விஜய் வருகிறாரா என்று பார்ப்போம்.
ஒருவேளை விஜய் தென்பட்டு அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் விஜய் முதலமைச்சராவார். பழனிசாமிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைப்பது சந்தேகம். அதனால் முன்னதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். அதிமுகவை அழிக்கும் பிறவியாக எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications