மிகுந்த கவலையில் முதல்வர்.. கோவை கார் வெடிப்பில் அரசியல் செய்வது தவறு..போலீசுக்கு வைகோ சப்போர்ட்
கிருஷ்ணகிரி: கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கவலைப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் அரசியல் செய்ய முயற்சித்தால் மிகவும் தவறானதாக முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோவை காரில் முதலில் வெடித்தது 2 சிலிண்டராக இருக்கும் என நினைத்தார்கள். இதுபற்றி அறிந்தவுடன் டிஜிபி மற்றும் ஏடிஜிபியை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த 10 மணிநேரத்தில் டிஜிபி, ஏடிஜிபி விசாரணை நடத்தினார்கள். சதி என்பது போல் தெரிகிறது. அந்த ஒருநபரின் பெயரை கூறி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்துக்குரிய பல பொருட்கள், ஆவணங்கள் கிடைத்தன. எவ்வளவு வேகமாக, துரிதமாக செயல்பட முடியுமோ தமிழ்நாடு காவல் துறையை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. மின்னல் வேகத்தில் தமிழ்நாடு காவல்துறை வேலை செய்துள்ளது.

இருப்பினும் கூட தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிஜிபி, தலைமை செயலாளர் உடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் ஸ்டாலின் தேசிய புலனாய்வு விசாரிக்க வேண்டும் என வழங்கி உள்ளார். தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் தொடர்ந்து நீண்டகாலம் இருந்து வருகிறது. இதனை பாழ்ப்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும், பின்னணியில் யார் இருந்தாலும் கண்டுபிடித்து இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.
முதல் அமைச்சர் மிகுந்த கவலையோடு, இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக தான் கோவையில் புதிதாக 3 காவல் நிலையங்கள் திறக்கவும், நுண்கருவிகள் கொண்டு ஆய்வு செய்யவும் நேற்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அரசியலாக்க முயற்சித்தால் மிகவும் தவறானதாக முடியும். ஆளும் அரசு அமைதியை நிலைநாட்ட கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications