ஒருத்தன் கொள்ளைக்காரன்... ஒருத்தன் திருடன்.. அதிமுக, பாஜகவை பொளேர் என விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
கிருஷ்ணகிரி: அதிமுக- பாஜக கூட்டணி உறவு முறிந்ததாக அறிவித்தாலும் லோக்சபா தேர்தலின் போது இரு கட்சிகளும் ஒன்றாகத்தான் வருவார்கள்; அப்போதும் திமுகவே வெற்றி பெறும் என திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசே திரும்பிப் பார்க்கும் முன்னோடி திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு வெறும் டெபிட் கார்டு அல்ல. இது மகளிரின் வாழ்க்கையை மாற்றும் துருப்பு சீட்டு.

பிற மாநிலங்களிலும்... : நமது திராவிடமாடல் கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை தற்போது கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. கலாச்சாரம், சட்டம், பொருளாதாரம் ஆகிய மூன்றால் பெண்களின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்று பெரியார் கூறினார்.
ஆரோக்கியமான ஜனநாயகம்: தற்போது பெரியார், அண்ணா, கருணாநிதி கனவை நிறைவேற்றியுள்ளது இந்த மகளிர் உரிமைத் திட்டம். பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. வீட்டோடு முடங்காமல் அனைத்து பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். வீட்டில் அரசியல் பேசவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் உருவாகும் என்றார்.
அதிமுக- பாஜக குழப்பம்: மேலும் அதிமுக- திமுக கூட்டணி உறவு முறிந்ததாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சற்று முன் கிடைத்திருக்கக் கூடிய ஒரு செய்தி. கேபி முனுசாமி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அதிமுக- பாஜக கூட்டணி தொடருதா? இல்லையா?ன்னு கடந்த 2 நாட்களாக ஒரே குழப்பம் இருந்துச்சு. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது, இது உட்கட்சி பிரச்சனை; தலையிட வேண்டாம் என்பதுதான்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இப்ப கேபி முனுசாமி சொல்லி இருக்கிறார், அதிமுக- பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என்று. நீங்க கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஜெயிக்கப் போவது திமுகதான்; நீங்க கூட்டணியை முறித்துக் கொண்டாலும் ஜெயிக்கப் போவது திமுகதான். மக்களை நீங்க ஏமாற்றிவிட முடியாது. இதனை உங்க அதிமுககாரனே நம்ப மாட்டான்.
கொள்ளைக்காரன், திருடன்: ஏனெனில் உங்க முன்னாள் முதல் அமைச்சர் மேல, உங்க முன்னாள் அமைச்சர்கள் மேல அத்தனை ஈடி (அமலாக்கத்துறை) வழக்கு இருக்கு.. நான் இப்ப சொல்றேன்.. தேர்தல் நேரத்துல மீண்டும் கூட்டணி வைப்பீங்க... இது ஒரு முறை நடந்தது இல்லை. பலமுறை நடந்திருக்கு. சண்டை போடுற மாதிரி சண்டை போடுவாங்க.. ஆனால் தேர்தல் நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் வருவாங்க.. ஏனெனில் ஒருத்தன் கொள்ளைக்காரன்; ஒருத்தன் திருடன். அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications