அதிமுகவின் கோட்டை பர்கூர்.. 1996ல் ஜெயலலிதாவுக்கு ஷாக் தந்த தொகுதி.. களநிலவரம் என்ன!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் சட்டசபை தொகுதி 1977 ம் ஆண்டு உருவான தொகுதியாகும். உருவான நாள் முதல் இப்போது வரை 9 முறை அதிமுக வென்றுள்ளது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
1996ல் நடந்த தேர்தலில் அதிமுக தோற்றுள்ளது. அதுவும் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீண்டும் போட்டியிட்ட போது சுகவனம் என்ற திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதேபோல் 2009ம் ஆண்டு கரூர் எம்பி ஆன தம்பிதுரை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. திமுக வெற்றி பெற்றது. மற்றபடி திமுக இங்கு வெற்றிபெற்றதே இல்லை.
பர்கூர் சட்டசபை தொகுதி 2011 மறுசீரமைப்புக்கு பின்னர் மாறி உள்ளது. முன்பு காவேரிப்பட்டணம் தொகுதியில் இருந்த வீரமலை, மருதேரி, குடிமேனஹள்ளி, விளங்கா முடி, ஜம்புகுட்டப்பட்டி, கீழ்க்குப்பம், பாரூர், பண்ணந்தூர், தாமோ தரஹள்ளி உள்பட பல ஊர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குட்டி சூரத் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளி தொழில் பர்கூரில் சூப்பராக வளர்ந்துள்ளது. பர்கூரில் உள்ள ஜவுளி மார்க்கெட்டில் ஒரே இடத்தில் 2200 க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளது. மாம்பழ விவசாயம் பெருமளவில் நடக்கிறது.
பலமுனை போட்டி
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பர்கூர் தொகுதியில், அதிமுக சார்பில் ஏ. கிருஷ்ணன், திமுக சார்பில் தே. மதியழகன், ஐஜேகே சார்பில் அருண் கவுதம், நாம் தமிழர் சார்பில் கருணாகரன், அமமுக சார்பில் எஸ். கணேச குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அதிமுக 9 முறை வெற்றி
பர்கூரில் இதுவரை நடந்துள்ள 11 சட்டசபை தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.கவும், 2 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1996 ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த தொகுதியில் தோல்வி அடைந்தார். ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது பர்கூர் .
திமுக 2 முறை வெற்றி
ஆனால் அதற்கு பிறகு 2001, 2011, 2016, நடந்த தேர்தல்களில் அ.தி.மு.கவே வெற்றி பெற்றது. 2009ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் திமுக வெற்றி பெற்றது. தி.மு.க. வேட்பாளர் நரசிம்மன் வெற்றி பெற்றார்.
என்ன பிரச்சனை
பர்கூர் சட்டசபை தொகுதியில் வன்னியர்கள், வெள்ளாள கவுண்டர்கள், நாயுடு, யாதவர்கள், குரும்பர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் பரவலாக வசித்து வருகிறார்கள். பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனையே பிரதான பிரச்னையாக உள்ளது. பர்கூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஜோலார்பேட்டை இருந்து பர்கூர் வழியாக மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரிக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக உள்ளது.
அதிமுகவுக்கு வாய்ப்பு
2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் சி.வி.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இந்த முறை அதிமுக சார்பில் ஏ. கிருஷ்ணன், திமுக சார்பில் தே. மதியழகன் போட்டியிடுகின்றனர். இந்த முறை 1996ல் நடந்ததை போல் வெற்றி பெற வேண்டும் என்று திமுக விரும்புகிறது. ஆனால் களநிலவரம் கடுமையாக இருக்கும் என்கிறார்கள்