பழங்கால கொலுசுக்காக.. 100 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொள்ளையர்கள்.. ராஜஸ்தானில் கொடூரம்
ஜெய்ப்பூர்: கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் காலை கொள்ளையர்கள் வெட்டிச் சென்ற மிக மிக கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஜமுனாதேவி. இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் வந்தனர்.
அவர்கள் மூதாட்டி தனியாக இருப்பதையும் அவர் காலில் பழங்காலத்து கொலுசு இருப்பதையும் கண்டனர். செயின் போல் கொலுசை அறுக்க முடியாது என்பதால் அந்த கொள்ளையர்கள் மாபாதக செயலில் ஈடுபட்டனர்.
திராவிடத்தால் தப்பித்தோம்! மகாராஷ்டிராவில் இன்றும் தொடரும் தேவதாசி முறை.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
மூதாட்டி
இதனால் மூதாட்டியின் கால்களையே வெட்டி அந்த கொலுசை திருடி சென்றனர். இதையடுத்து வலியால் துடித்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கால்கள் மட்டுமல்லாது அவரது கழுத்து பகுதியிலும் வெட்டு காயம் பட்டுள்ளது. இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல் துறை அதிகாரி கல்தா பிஎஸ் கூறுகையில் 100 வயது மூதாட்டியின் கொலுசை பறிக்க கொள்ளையர்கள் முயன்றுள்ளனர்.
அப்போது கொள்ளையர்கள் கொலுசுடன் சேர்த்து கால்களை வெட்டிவிட்டனர். மூதாட்டியின் கால்களை கொள்ளையர்கள் வெட்ட பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெட்டப்பட்ட பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. மூதாட்டிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
வெட்டிய பாகங்கள்
இதுகுறித்து மூதாட்டியின் மகள் கங்காதேவி கூறுகையில் எனது அம்மாவின் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் எனது மகள்தான் இந்த விஷயத்தை முதலில் என்னிடம் கூறியிருந்தார். உடனடியாக ஓடிச் சென்று வெட்டிய பாகங்களை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்தார் உதவியுடன் தாயையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் என்றார்.
நிலத்தின் உரிமையாளர்
இதுகுறித்து கங்காதேவியின் மகள் கூறுகையில் எனது பாட்டியின் கால்களை யாரோ வெட்டிவிட்டதால் அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என என்னிடம் நிலத்தின் உரிமையாளர் ஒருவர் கூறினார். அதன்பேரில் எனது அம்மாவுக்கு நான் தகவல் கொடுத்தேன் என்றார். குற்றவாளிகளிடம் இருந்து கொலுசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மர்ம கும்பல்
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. மர்ம கும்பல் குறித்து சில தடயங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் இது போல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.