இங்கிலாந்தில் துணை மேயர் பதவி! சென்னையை பூர்வீகமாக கொண்ட பெண் தேர்வு!
லண்டன்: சென்னையை பூர்வீகமாக கொண்ட மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 1,200 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்த பதவியை தான் கைப்பற்றியதாக அவர் பெருமைப்பட்டார்.
தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளில் முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். அரசியல், தொழில் நிறுவனங்களில் அவர்கள் கொடிக்கட்டி பறக்கின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் வெளிநாடுகளில் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையை சேர்ந்த பெண் இங்கிலாந்தில் புதிய பொறுப்புக்கு தேர்வாகி உள்ளார். அதன் விபரம் வருமாறு:
சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு... தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு... பதற்றம்
சென்னையை சேர்ந்தவர்
இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி மகாணத்தில் வசித்து வருபவர் மோனிகா தேவேந்திரன். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் அரசியலில் நாட்டம் கொண்டுள்ளார். இதன்மூலம் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலில் ஏம்ஸ்பரி மேற்கு பகுதி கவுன்சிலராக இருந்தார். இந்த கவுன்சிலுக்கான துணை மேயர் தேர்தல் நடந்தது.
துணை மேயராக தேர்வு
இதில் மோனிகா தேவேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து அவர் பிற கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக தேர்வாகி பதவியேற்றுள்ளார். ஏம்ஸ்பரி பகுதிகளில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் இல்லை என கூறப்படும் நிலையில் மோனிகா தேவேந்திரனுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.
ரொம்ப பெருமையா இருக்கு
இதுபற்றி மோனிகா தேவேந்திரன் கூறுகையில், ‛‛எனக்கு சென்னை தான் சொந்த ஊர். லண்டன் என்பது நான் வேலை செய்த ஊர். இதனால் இரண்டு ஊர்களும் எனக்கு முக்கியம். சென்னை, லண்டன் இரண்டும் எனக்கு இருகண்கள். தற்போது இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு தமிழர்கள் கிடையாது. முழுவதுமாக இங்கிலாந்து நாட்டினர் தான் உள்ளனர். இருப்பினும் இங்கிலாந்தின் பிற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், சங்கத்தினர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
1,200 ஆண்டுகள் இல்லாத வரலாறு
இங்கு ஏறக்குறைய 1,200 ஆண்டுகளாக இந்த பதவி இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. நான் பழகும், விதம், சேவை மனப்பான்மையை பார்த்து கவுன்சிலர்கள் என்னை இந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகுந்த சந்தோஷமடைகிறேன். என்மீது வைத்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். மக்களுக்கு இன்னும் அதிக சேவைகள் செய்து நல்ல பெயர் எடுத்து மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிப்பேன்.
சொந்தஊர் வர ஆவல்
இந்த தருணத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இங்கிலாந்தில் எம்பியாக வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. மேலும், சொந்த ஊருக்கு வரவும் ஆவலாக இருக்கிறேன். இங்கு பணிகளை பூர்த்தி செய்துவிட்டு இந்தியா வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்வேன்'' என்றார்.