“மாட்டிறைச்சி”க்கு ஆதரவு.. பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கின் “உணவு சுதந்திரம்” பற்றிய ட்வீட்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இருந்து பென்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து பிரதமராகும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மாட்டிறைச்சி தொழிலுக்கு ஆதரவாக தெரிவித்த ட்விட்டர் பதிவு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் விலகியதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார். ஆனால், பொருளாதார நெருக்கடி நிலையை கையாள முடியவில்லை என்று கூறி பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.

போட்டி
இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும், நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்டும் களமிறங்குவதாக செய்திகள் வெளியாகின. ரிஷி சுனக் அங்கம் வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளன நிலையில் 100 எம்பிக்கள் ஆதரவு இருந்தால் இந்த தேர்தலில் போட்டியிட முடியும்.

விலகிய ஜான்சன்
இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்காக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக ரிஷி சுனக் மாலை தெரிவித்தார். போரிஸ் ஜான்சன் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து ரிஷி சுனக் மற்றும் பென்னி மார்டாண்ட் ஆகியோர் இடையே போட்டி ஏற்படும் நிலை இருந்தது.

பென்னி முடிவு
மற்றொரு போட்டியாளரான பிரிட்டன் நாடாளுமன்ற முன்னவர் பொன்னி மார்டான்டுக்கு குறைவான எம்பிக்கள் ஆதரவே இருந்தது. இந்த நிலையில் மாலை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் பென்னி மார்டாண்ட். மேலும் ரிஷி சுனக்கிற்கு ஆதரவளிப்பதாகவும் பொன்னி மார்டாண்ட் அறிவித்து இருக்கிறார்.

பிரதமராகும் ரிஷி
இதன் மூலம் ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டன் பிரதமராக நியமித்த பின் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவை சேர்ந்த தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பழைய ட்வீட்
42 வயதான இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவதை குறிப்பிட்டு பாஜக, இந்துத்துவ அமைப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மாட்டிறைச்சிக்கு ஆதரவு
அதில், "எனது தொகுதியில் நூற்றுக்கணக்கான மாட்டிறைச்சி மற்றும் ஆடு விவசாயிகள் வசிக்கின்றனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அருமையான தொழிலை ஆதரிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது மக்களின் முடிவு. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எங்கள் கால்நடை விவசாயிகளை ஆதரிக்கும் அரசாங்கத்தை நான் வழிநடத்துவேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications