ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு 78வது இடம்.. தமிழக ஊழல் குறித்து ஷாக் தகவல்
லண்டன்: உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78 வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே ஊழல் குறைவான நாடாக டென்மார்க் முதலிடம் பிடிததுள்ளது.
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் அரசு சாரா அமைப்பான 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலுக்காக உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொள்கிறது.
இந்த 180 நாடுகளில் அந்த நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிடுகிறது.

16 நாடுகள் மோசம்
மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் 100 க்கு 100 மதிப்பெண்களை பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், ஊழல் இல்லாத நாடு என்ற வகையில் முதலிடத்தை பெற்ற நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 180 நாடுகளில், 20 நாடுகள் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி முன்னேற்றத்தை கண்டு வருகிறது என்று இந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அதற்கு நேர் எதிர் திசையில் 16 நாடுகள் ஊழலில் திளைக்கும் நாடுகளாகவும் இந்த அமைப்பால் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் முறைகேடுகள்
இந்த ஆய்வின் முடிவில் எந்த நாடும் 100 க்கு 100 என்ற மதிப்பெண்ணை பெறவில்லை. ஒரு நாட்டில் ஊழலோ அல்லது முறைகேடுகளோ நடைபெறாமல் இருந்தாலும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது அல்லது அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும்போது அங்கு முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே அந்த நாடுகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.

நியூசிலாந்து-சிங்கப்பூர்
இப்படியாக ஆய்வு நடத்தியதன் அடிப்படையில் 88 மதிப்பெண்ணைப் பெற்று டென்மார்க் ஊழல் இல்லாத நாடு அல்லது ஊழல் மிகவும் குறைந்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. நியூசிலாந்து 87 மதிப்பெண்ணைப் பெற்று இரண்டாவது இடத்தையும், பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் தலா 85 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த முறை 81வது இடம்
இந்த வரிசையில் 41 மதிப்பெண்களைப் பெற்று ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2017-ல் 40 மதிப்பெண்களைப் பெற்றிருந்த இந்தியா 81-வது இடத்தைப் பிடித்திருந்தது. அந்த வகையில் கடந்த 2017 பட்டியலைவிட 2018 பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. ஆனால் 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்ற இந்தியா 79-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி தகவல்
'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ லஞ்சம் அல்லது நன்கொடை கொடுத்தே தங்களின் வேலைகளை முடித்துள்ளனர் என்று கூறுகிறது. 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' இதில் துறை வாரியாக பார்க்கும்போது பத்திரப்பதிவு துறையில் 44 சதவிகிதம், காவல் துறையில் 17 சதவிகிதம், உள்ளாட்சி அமைப்புகளில் 15 சதவிகிதம் மற்றும் மின்வாரியம், போக்குவரத்து, வருவாய்த் துறை போன்ற துறைகளில் 25 சதவிகிதம் அளவுக்கு லஞ்சம் புழக்கத்தில் உள்ளது என 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' தெளிவுபடுத்துகிறது.

சோமாலியா கடைசி இடம்
பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 117-வது இடத்தையும், சீனா 87-வது இடத்தையும் பெற்றுள்ளது. சோமாலியா, வெறும் 10 மதிப்பெண்ணை மட்டுமே பெற்று கடைசி இடத்திலும் உள்ளது.












Click it and Unblock the Notifications