தாத்தாவின் நினைவுகளைத் தேடி.. நீலகிரி வந்த பாசக்கார லண்டன் பேரன்!.. ரியலாகவே ஒரு மதராசபட்டினம்
நீலகிரி: தனது தாத்தாவின் நினைவுகள் சுற்றித்திரிந்த வெலிங்டன் ராணுவ மையத்தை சுற்றிப்பார்க்க லண்டனில் இருந்து வந்துள்ளார் அவரது பேரன். மதராசபட்டினம் சினிமா பாணியில் லண்டன்காரர் ஒருவர் வந்து சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மதராசபட்டினம் படத்தில், 'சென்னை காதலனை விட்டு சென்ற இளவரசி முதுமை காலத்தில் மீண்டும் காதலனை தேடி இங்கிலாத்தில் இருந்து இந்தியா வருவார். அவருடன் பேத்தியும் வருவார் தன் பாட்டியின் நினைவுகளை மீட்க, சென்னை நகரம் முழுவதும் பயணம் செய்வார்.
இளம் வயதில் பாட்டி சுற்றித்திரிந்த வாழ்ந்த பகுதிகளை தேடி தேடி நினைவு கொள்வார். உணர்வுப்பூர்வமான காதல் கதை மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த படம் மதராசபட்டினம். அப்படி தான் பேரன் ஒருவர், தன் தாத்தா நினைவுகளை மீட்க லண்டனிலிருந்து குன்னூர் வெலிங்டனுக்கு வந்துள்ளார்

தாத்தாவின் நினைவுகளை தேடிய பேரன்
இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ குட்லேண்ட். உலக வங்கியில் முதன்மை விவசாய நிபுணராக உள்ள இவர் தனது நண்பர் கிறிஸ்டோபர் என்பவருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனுக்கு வருகை தந்தார். இவர் வந்தது தனது தாத்தா சுற்றித்திரிந்த இடங்களைத் தேடி.

லண்டன் தாத்தா
முதல் உலக போர் நடந்த போது, அதில் ஆங்கிலேயர் படையில் 2வது லெப்டினென்ட் ஆக பணியாற்றியவர் இவரது தாத்தா ஸ்டேன்லி குட்லேண்ட். இவர் இங்குள்ள ஸ்டேஷன் ஹாஸ்பிடல் என்ற ராணுவ மருத்துவனையில் டைபாய்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனை கடிதங்களாக எழுதி வைத்தது புத்தகமாக இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுத்த பேரன்
அதில் வெலிங்டன் பற்றி மிகவும் சிறப்பாக எழுதி உள்ளதால் தனது தாத்தாவின் நினைவுகள் சுமந்த இடத்தை தானும் பார்வையிட வருகை தந்துள்ளார் அவரது பேரன். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து சென்ற இடங்கள், அவர் கோல்ப் விளையாடிய ஜிம்கானா மைதானம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ரசித்து புகைப்படம் எடுத்தார்.
இவருக்கு தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார் இடங்களை நேரில் அழைத்து சென்று காண்பித்து விளக்கம் அளித்தார்.

அன்பான மனிதர்கள்
தாத்தா சுற்றித்திரிந்த இடங்களை பார்வையிட்ட ஆண்ட்ரூ குட் லேண்ட் கூறும் போது, " எனது தாத்தா உலக போரின் போது டைபாய்டு பாதித்து இங்கு சிகிச்சை பெற்றதும், வெலிங்டன் பற்றி சிறப்பாக உள்ளது குறித்தும் எழுதி சென்றுள்ளார். இந்த இடங்களை பார்வையிட வேண்டும் என்பதே பல ஆண்டுகள் கனவாக இருந்தது. இந்த இடங்களை பார்வையிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள மக்களும் அன்புள்ளவர்களாக உள்ளனர் என்று மன நிறைவுடன் கூறிவிட்டு லண்டன் திரும்பினார்.

நினைவுகள் சுகமானவை
நம்முடைய நினைவுகள் சுகமானவை. நல்ல சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்து ரசித்து மகிழலாம். சில நினைவுகள் தலைமுறைகளைக் கடந்தும் நீங்காமல் இருக்கும். அப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் வெலிங்டனில் வாழ்ந்த தாத்தா ஒருவர் விட்டுச்சென்ற நினைவுகளைத் தேடி தமிழகம் வந்து திரும்பியுள்ளார் லண்டன் பேரன். இப்போது ஆண்ட்ரூ குட்லேண்ட் தனது பயணத்தை எழுதி வைப்பார். அதை படித்து விட்டு தனது தாத்தாவின் நினைவுகளைத் தேடி மீண்டும் அவரது பேரன் வரலாம்.












Click it and Unblock the Notifications