பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கர்கள் இருவருக்கு அறிவிப்பு.. ஏலம் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்
லண்டன்: 2020 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோர் நோபல் பரிசை பகிர்ந்து பெறுகிறார்கள்.
பல துறைகளிலும் சாதனை படைத்தோருக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு பிரிவின்கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பல பிரிவுகளில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

உலக அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா. சபையின், உலக உணவு திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. பசியை போக்கி, வன்முறைகளை தடுத்து நிறுத்தியதற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, ஏலம் தொடர்பான கோட்பாட்டை உருவாக்கிய, பொருளாதார வல்லுநர்கள், பால் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகிய அமெரிக்கர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இவர்கள் இருவரும், ஏலம் எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து கோட்பாடுகளை உருவாக்கினர். வழக்கமான நடைமுறைகளில், பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்ய முடியாதபோது, அவற்றை, ஏலம் மூலம் எப்படி விற்பனை செய்வது என்பது தொடர்பான ஆய்வுகளை இவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இவர்களது கண்டுபிடிப்புகள், உலகம் முழுக்க, விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் மற்றும் வரி செலுத்துவோர் ஆகியோருக்கு பலன் கொடுக்கும். இவ்வாறு நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications