டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இரவு விவாதம்!
லண்டன்: இந்தியாவில் ஊடக சுதந்திரம், போராட்டக்காரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு விவாதிக்கப்படுகிறது.
3 வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு எதிரானது என கூறி லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு- விவசாய சங்கங்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், பாப் பாடகி ரெஹான்னா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டோவும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இது உள்நாட்டு விவகாரம் என்பதால் இதில் வெளிநாட்டினர் கருத்து சொல்வதோ தலையிடுவதோ வேண்டாம் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விமர்சனங்களை பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பி கிளெடியா வெப்பே முன் வைத்து வருகிறார்.
இந்திய விவசாயிகள் போராட்ட விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என ஆன்லைனில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அது போல் சில பிரிட்டன் எம்பிக்களும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதன்படி லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி எம்பியும் மனுக்கள் குழு உறுப்பினருமான மார்டின் டே தொடக்க உரையாற்றுகிறார். பிரிட்டன் அரசு சார்பில் அந்நாட்டு அமைச்சர் ஒருவரும் பதில் அளிக்கவுள்ளார்.
மேலும் போராட்டக்காரர்களின் பாதுகாப்பு அம்சங்கள், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற தலைப்பிலான மனு மீது இந்த விவாதம் நடைபெறுகிறது.