உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர் மோடிதான்.. பிரிட்டன் எம்பி ஒரே போடு! வியந்த பிரிட்டன் நாடாளுமன்றம்
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை இந்த கிரகத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரிட்டன் எம்பி லார்ட் கரன் பிலிமோரியா. மேலும் பல விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. கடந்த 2002இல் ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து இருந்தது.
இதில் பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவரை இந்த கலவரத்தில் தொடர்புப்படுத்தியும் கருத்துகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
காலனியாதிக்க மனோபாவம்.. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்.. கடுமையாக சாடிய மத்திய அரசு
பிரிட்டன்
இது தொடர்பாகப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திலும் கூட அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் இதற்கும் பிரிட்டன் அரசுக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டார். மேலும், இந்த உலகின் எந்தப்பகுதியில் அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம் என்று கூறிய அவர், அதேநேரம் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் இதனைத் தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறி இருந்தார். இந்தச் சூழலில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் அந்நாட்டின் எம்பி ஒருவர் பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கிரகத்தில் சக்திவாய்ந்த நபர்
பிரதமர் நரேந்திர மோடியை இந்த கிரகத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரிட்டன் எம்பி லார்ட் கரன் பிலிமோரியா, இந்தியாவுடன் பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியில் வலுவான உறவு தேவை என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சிறுவனாக இருந்தபோது, நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள ரயில் நிலையத்தில் தனது தந்தையின் தேநீர்க் கடையில் தேநீர் விற்றார். இன்று அவர் இந்தியாவின் பிரதமராகலும் இந்த கிரகத்தில் மிகவும் சக்திவாய்ந்தவர்களில் ஒருவராகவும் உள்ளார்.
ஜி20 தலைமை பொறுப்பு
இன்று இந்தியா ஜி 20 தலைவர் பதவியில் உள்ளது. இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 32 பில்லியன் டாலர் ஜிடிபியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது. இந்திய என்ற இந்த எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது. இப்போது உலகிலேயே அதிவேக ரயிலாக.. அதாவது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது.. வரும் காலங்களில் இந்தியாவின் நெருங்கிய மற்றும் நம்பகமான நண்பராகப் பிரிட்டன் இருக்க வேண்டும்.
புதிய நிறுவனங்கள்
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, இப்போது இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும் இருக்கிறது. 75 ஆண்டுக்கால ஜனநாயகத்துடன், இந்தியா ஒரு இளம் நாடு. கடந்த நிதியாண்டில் இது 8.7 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்தது.. அங்கு இப்போது 100 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. அதாவது பூமியில் இருக்கும் 10 யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்று இப்போது இந்தியாவில் இருக்கிறது.
இரு நாட்டு வர்த்தகம்
மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய சக்தி எனர்ஜி உற்பத்தியில் இந்தியா இப்போது 4ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியா ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் உடன் இணைந்து கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கோடிக் கணக்கான வேக்சின் டோஸ்களை உற்பத்தி செய்து தனது வலிமையை உலகிற்குக் காட்டியது. இரு நாட்டிற்கும் இடையேயான வர்த்தகத்தைப் பொறுத்தவரை இங்கிலாந்து-இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சிறப்பாக உள்ளது.
இது போதாது
இப்போது இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு 29.6 பில்லியன் பவுண்டுகளாக உள்ள போதிலும், இங்கிலாந்தின் 12வது பெரிய வர்த்தக நாடாகவே இந்தியா உள்ளது. இது போதாது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் அதிகரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.. பிரிட்டன் நாட்டின் ஊடகமான பிபிசி பிரதமர் மோடி தொடர்புப்படுத்தி ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், அந்நாட்டின் எம்பி ஒருவர் இப்படிப் புகழ்ந்து பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.