காஷ்மீர், லடாக் பகுதிகளை... தனித்து காட்டிய உலக சுகாதார அமைப்பு... கடும் அதிருப்தியில் இந்தியா
லண்டன்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவிலிருந்து தனித்துக் காட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி, சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் எந்தளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த வரைபடம்தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
Array
உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில் இந்தியா முழுவதும் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் க்ரே நிறத்தில் மார்க் செய்யப்பட்டுள்ளது. அதேபோல காஷ்மீரில் சீனா உரிமை கொண்டாடும் பகுதி, க்ரே நிறத்தில் நீல கோடுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைபடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடும் அதிருப்தி
இந்த புதிய வரைபடம் குறித்து உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறுகையில்,"இந்த வரைபடம் குறித்து உயர்மட்ட அளவில் இந்தியா தனது கண்டனத்தை உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வரைபடத்தில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்தியைக் குறிப்பிட்டுள்ளது" என்றார்.
எச்சரிக்கை செய்தி
இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்திய போதும், உலக சுகாதார அமைப்பு தனது வரைபடத்தை மாற்றவில்லை. மாறாக எச்சரிக்கை செய்தியை மட்டுமே சேர்த்துள்ளது. அதில், "இந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகள் எதுவும் சட்டபூர்வமானது இல்லை. இதன் மூலம் உலக சுகாதார அமைப்பு எந்த கருத்தையும் கூறவில்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் தோராயமான எல்லைகளே" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கடிதம்
இது குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு இந்தியா மூன்று முறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா கடும் அதிருப்தியை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோத்திடம் தெரிவித்துள்ளது. கடைசியாக எழுதிய கடிதத்திலும்கூட, உடனடியாக இந்திய வரைபடத்தைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு இதுவரை தனது வரைபடத்தை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.