அப்படியே சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மீரட்டின் ஜாகிர் நகர் பகுதியில் நேற்று மாலை 5.50 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீடு பால் பண்ணையாருக்கு சொந்தமானதாகும். விபத்து நடந்த உடன், மீட்பு பணிகளுக்காக போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 12 எருமை மாடுகளும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். விபத்து நடந்த இடம் குறுகலான பகுதி என்பதால், அப்பகுதிக்குள் ஜேசிபி போன்ற மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே வர முடியாமல் தவித்திருக்கின்றன. எனவே நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறுகையில், "விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே நாங்கள் இந்த பகுதிக்கு வந்துவிட்டோம். மொத்தம் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளனர்.
கட்டிட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications