இந்தியாவில் வெடிகுண்டு வைக்க சதி.. 7 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி
அரிதிலும் அரிதான வழக்காக இது கருதப்படுவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
லக்னோ: உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேருக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரிதிலும் அரிதான வழக்காக இது கருதப்படுவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குண்டு வைத்ததிலும் இந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கதிகலங்க வைத்த ரயில் குண்டுவெடிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து உஜ்ஜைன் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் நடத்திய விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

என்கவுன்ட்டர் - கைது
அப்போது, கான்பூர் நகர் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ஏடிஎஸ் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஏடிஎஸ் படை அதிகாரிகள் அங்கு சென்ற போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், ஏடிஎஸ் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் சைஃபுல்லா என்பவர் கொல்லப்பட்டார். முகமது ஃபைசல் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள், வெளிநாட்டுப் பணம், போலி பாஸ்போர்ட்டுகள், சாட்டிலைட் செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஐஎஸ் அமைப்பின் கொடிகள் மற்றும் அது தொடர்பான புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.

8 தீவிரவாதிகள் கைது
இதையடுத்து, முகமது ஃபைசலிடம் ஏடிஎஸ் படையினர் நடத்திய விசாரணையில், மத்தியப் பிரதேச ரயிலுக்குக் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டான். மேலும், உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கச் சதித்திட்டம் தீட்டியதையும் அவன் ஒப்புக்கொண்டான். பின்னர் என்ஐஏ அமைப்புக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அடீஃப் முசாஃபர், முகமது அசார், கவுஸ் முகமது கான், முகமது டேனிஷ், ஆசிப் இக்பால், சையது மீர் ஹுசேன், அடீஃப் இரானி ஆகிய 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

அதிரடி தீர்ப்பு
குற்றவாளி என அறிவிப்பு இந்த 8 பேர் மீது 2 என்ஐஏ அதிகாரிகள், லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு, மத்தியப் பிரதேச ரயில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது, உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டியது போன்றவற்றை ஆதாரங்களுடன் பதிவு செய்திருந்தனர். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி இந்த 8 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வி.எஸ். திரிபாதி இன்று வாசித்தார். அதில், "குற்றவாளிகள் செய்த சதிச்செயல்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அடீஃப் இரானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது" என தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications