'தாலி' கட்டும் நேரத்தில்.. திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! காரணத்தை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
லக்னோ: திருமணம் என்பது வாழ்வின் ஒருமுறைதான் வரும். நண்பர்கள் புடை சூழ, ஊர் கூடி வாழ்த்த இரு மனங்கள் இணையும் விழா ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் உன்னதமானது. இதில் பெரும்பாலோர் வாழ்நாள் இறுதி காலம் வரையிலும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஒரு சிலர் பாதியிலேயே பிரிந்து வாழ நேரிடுகிறது. நிலைமை இப்படி இருக்க சமீப காலமாக தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்று போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகின்றன. சமீபத்தில் நமது கடலூர் மாவட்டத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
அடிக்கடி நிற்கும் திருமணங்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொறியியல் பட்டதாரிக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென மணமகளின் கன்னத்தில் மணமகன் அறைந்துள்ளார். .திருமணத்திற்கு முன்பாகவே இப்படி நடந்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி இருப்பார்? என்று கூறி மணமகள் திருமணத்தையே நிறுத்தி விட்டார். இதேபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் தற்போது நடந்துள்ளது.
மணமகன் செய்த செயல்
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் உள்ள நவீன் பஸ்தி பகுதியில் திருமண விழா நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் சூழ்ந்து இருக்க மணமகன்-மணமகள் இருவரும் முகத்தில் புன்னகை ததும்ப காட்சி அளித்து கொண்டிருந்தனர். தாலி கட்டும் நேரத்துக்கு முன்பாக மணமக்கள் இருவரும் மாலையை மாற்றிக் கொள்ளும் 'வர்மலா' நிகழ்வு நடந்தது. அப்போது மணமகன், மணமகளின் கழுத்தில் மாலையை அணிவிக்காமல் அவர் மீது வீசியதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்ய மறுத்த மணமகள்
இதனால் கோபம் அடைந்த மணப்பெண் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இப்படி மோசமாக நடக்கும் மணமகனை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ''நான் மாலையை வீசவில்லை'' என மணப்பெண்ணிடம், மணமகன் எடுத்துக் கூறினார். ''திருமணச் சடங்குகளை தொடர வேண்டும். இந்த கல்யாணம் நடக்க வேண்டும்'' என்று மணமகன் வீட்டினர் கூறினார்கள். ஆனால் எதையும் காதில் வாங்காத மணப்பெண் திருமணம் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பரிசு பொருட்களை திருப்பி கொடுத்தனர்
இதனை தொடர்ந்து மணமகன் குடும்பத்துக்கும், மணமகள் குடும்பத்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் விஷயம் போலீஸ் வரை சென்று விட்டது. போலீசும் வந்து விட்டனர். பின்னர் இரு வீட்டாரும் பரிசுப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். திருமணம் நின்று விட்ட விரக்தியில் மணமகன் சோகமுடன் சென்றார்.
இதுதான் 'வர்மலா' சடங்கு
பொதுவாக வட இந்தியாவில் திருமண விழாவில் தாலி கட்டும் நேரத்துக்கு முன்பாக 'வர்மலா' என்னும் சடங்கு நடைபெறும். மணமகனும், மணமகளும் திருமணத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளமாக புது மலர்களால் ஆன மாலையை மாற்றிக் கொள்ளும் நிகழ்வே 'வர்மலா' ஆகும். இந்த நிகழ்வு வட இந்தியாவில் பரம்பரியமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.