உ.பி.யில் பாஜக ருத்ரதாண்டவம்.. 17 மேயர் பதவிகளையும் கைப்பற்றியது.. டபுள் வெற்றி- பூரிக்கும் யோகி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 199 நகர் பலிகா பரிஷத்கள், 544 நகர் பஞ்சாயாத்து பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் 4 ஆம் தேதி நடந்தது. 2 வது கட்ட தேர்தல் 11 ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள 17 மாநகராட்சிகள், 199 நகர் பலிகா பரிஷத்கள், 544 நகர் பஞ்சாயாத்து பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அங்குள்ள 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
"கடந்த 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பாஜக இரு மடங்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக அரசு, நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும்" என்றார்.
மேயர் பதவிகளில் மொத்தமாக பாஜக வெற்றி பெற்றாலும் நகராட்சி பதவிகளில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும், பிஎஸ்பி கட்சியும் பாஜவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றன. மொத்தமுள்ள 199 நகராட்சி இடங்களில் பாஜக 65 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 53 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டு இருந்தார். அப்போது உத்தர பிரதேசமும் நமது நாடும் பாஜக ஆட்சியின் கீழ் பெரும் மாற்றத்தை சந்தித்து உள்ளது. பிரிவினைவாதம், பயங்கரவாதம், நக்சலிசம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க பாஜக அரசு பணியாற்றி வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதால் இந்தியாவின் மதிப்பும் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications