பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக?
லக்னோ: கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் பாஜக மிகவும் கடுமையாக போராடித்தான் ஆகவேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக அரியாசனத்தில் அமர தொகுதிகளை அப்படியே தாரை வார்த்துக் கொடுத்தது உத்தரப்பிரதேசம். ஆனால் இந்த முறை களநிலவரம் தலைகீழாகத்தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதுவும் வாக்குப் பதிவை மே 6-ல் எதிர்கொள்ள இருக்கிற கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இம்முறை பாஜக கடும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேற்கு உத்தரப்பிரதேசத்தை இந்துத்துவா கொள்கைகளால் பாஜக தமது கோட்டையாக்கி வைத்திருக்கிறது.
ராமாயணம், மகாபாரதத்தை விமர்சிப்பதா? சீதாராம் யெச்சூரி மீது எச்.ராஜா பாய்ச்சல்
பிராமணர்கள், ராஜ்பார்கள்
வாரணாசி, அமேதி உள்ளிட்டவை அடங்கிய கிழக்கு உத்தரப்பிரதேசம் கடந்த சில தேர்தல்களில்தான் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள், ராஜ்பார்கள் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.
பிராமணர்கள் அதிருப்தி
உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பிராமணர்களுக்கும் பாஜகவுக்கும் இடைவெளி அதிகரித்தது. யோகி தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் தாக்கூர் சமூகத்தினருக்கே அவர் முன்னுரிமை தருகிறார் என்பது பிராமணரகளின் குற்றச்சாட்டு.
ப்ளானுடன் களமிறக்கப்பட்ட பிரியங்கா
பிராமணர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்; அந்த சமூகத்தின் வாக்குகளை மடைமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொதுச்செயலராக பிரியங்கா காந்தியை களம் இறக்கியது காங்கிரஸ். இந்த மெகா கூட்டணியை எதிர்கொள்ள, கிழக்கு உத்தரப்பிரதேச தொகுதிகளில் அறுவடை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடியில் சிக்கியது பாஜக. அதுவும் களத்தில் பிரியங்கா இறங்க பிரதமர் மோடி அதிக பொதுக்கூட்டங்களை கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நடத்தியிருந்தார். கிழக்கு உ.பி.யில் தங்களது ஒட்டுமொத்த அதிருப்தியை பாஜகவுக்கு எதிராகவே இம்முறை பிராமணர்கள் வெளிப்படுத்தவே வாய்ப்பு உண்டு.
அதிருப்தியில் ராஜ்பார் சமூகம்
கிழக்கு உ,பி.யில் ராஜ்பார்கள் சமூகம் 12 மாவட்டங்களில் நிறைந்து இருக்கிறார்கள். எஸ்.பி.எஸ்.பி கட்சியின் தலைவர் ராஜ்பார், அச்சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர். 2014 தேர்தலில் பாஜக கூட்டணியில் ராஜ்பார் கட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அச்சமூகத்தின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு போனது. இம்முறை பாஜக 3 தொகுதிகளை ஒதுக்காத அதிருப்தியில் கூட்டணியை முறித்துக் கொண்டது ராஜ்பார் கட்சி. அத்துடன் பாஜகவை தோற்கடித்தே தீருவோம் என முழங்கி வருகின்றன ராஜ்பார் சமூகத் தலைவர்கள். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ராஜ்பார்கள் கணிசமாக உள்ளனர். இப்படி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் திட்டவட்டமான கருத்து.