அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 9 விமான நிலையங்கள்! அதிரடியாக மாறும் உ.பி! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 9 விமான நிலையங்கள் அமையும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு மாநில அரசு வரவேற்பு தெரிவித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, உ.பியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 9 விமான நிலையங்கள் அமையும் என தெரிவித்திருக்கிறது. தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த விவரத்தை கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
“சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 75 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014 முதல் 12 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கடந்த 1947 தொடங்கி 2014ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் 3 விமான நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் ஒன்பது விமான நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆக உயரும்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications