ச்சே! 30 அடி உயரத்திலிருந்து குழந்தைகளை வீசிய.. கொலைகார அப்பா! 2 தம்பிகளை துணிச்சலாக காத்த சிறுமி
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தனது நான்கு குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்ய முயன்ற தந்தை கைது செய்யப்பட்டு உள்ளார்..
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது நான்கு குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூத்த மகள் தனது இரண்டு சகோதரர்களை நீச்சலடித்து காப்பாற்றியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச மாவட்டத்தின் ஷேக்பூர் ஹுண்டா பகுதியில் புஷ்பேந்திர குமார் தனது மனைவி மற்றும் சோனு (13), பிரபா (12), காஜல் (8) மற்றும் ஹேமலதா (5) எனும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர் அவ்வப்போது பஞ்சாயத்து பேசி தீர்த்து வைத்துள்ளனர்.
ஆனால் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் இந்த சண்டையும் ஓய்ந்தபாடில்லை. எனவே ஒவ்வொரு முறை சண்டை நடக்கும்போதும் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இப்படியே போய்க்கொண்டிருக்கையில் நேற்று முன்தினம் இரவு இந்த சண்டை பெரியதாக வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியை அவரது தாய் வீட்டில் விடுவதற்கு நேற்று காலை சென்றிருக்கிறார்.
குடிபோதையில் மகளுடன் தகராறு..தட்டிக்கேட்ட மாமனாரை சுட்ட மருமகன்..வெலவெலத்த காரைக்குடி
சண்டை
மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்ந்த குமார், குழந்தைகளிடம் பொருட்காட்சிக்கு போகலாம் என்று கூறி தயாராக சொல்லியுள்ளார். குழந்தைகளுக்கும் குஷியாகி புத்தாடை அணிந்து தயாராகி இருக்கிறார்கள். குழந்தைகள் நால்வரையும் அதே ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஒரு பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி குழந்தைகளை இறக்கி ஆட்டோவை அனுப்பி வைத்துள்ளார். குழந்தைகள் பொருட்காட்சி எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு குமார், "இன்று நாம் பாலத்தை பார்க்கலாம். நாளை பொருட்காட்சியை பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.
கொலை முயற்சி
குழந்தைகளும் கீழே ஓடும் தண்ணீரை பார்த்தவாரு நின்றுக்கொண்டிருந்துள்ளனர். குமார் ஒவ்வொரு குழந்தையாக தூக்கி பாலத்தின் சுவர் மீது அமர வைத்துள்ளார். குழந்தைகள் தண்ணீரை பார்த்து குஷியடைந்துள்ளனர். ஆனால் அடுத்து நடக்க இருக்கும் சோகம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. எதிர் திசையிலிருந்து வீசும் குளிர் காற்று குழந்தைகளை மேலும் சந்தோஷமடைய வைத்திருந்திருக்கிறது. நீல வானத்தையும் தொலைவில் தெரியும் மலையையும் அசைந்து நகரும் பச்சை நிற தண்ணீரையும் பார்த்தவாரு அமர்ந்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென குமார் ஒவ்வொரு குழந்தையாக தண்ணீரில் தள்ளி விட்டுள்ளார்.
மீட்டு
சுமார் 30 அடி உயரத்திலிருந்து ஒவ்வொரு குழந்தையாக கீழே விழுந்துள்ளது. இதில் பிரபா மட்டும் உஷாராகிவிட்டார். தான் தண்ணீரில் விழுந்தவுடன் நீச்சலடித்து மேலே வந்திருக்கிறார். மட்டுமல்லாது நீரில் தத்தளித்திருந்த சோனுவையும் காஜலையும் பார்த்தவுடன் அவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறார். காஜலை கரை சேர்ந்த பின்னர் சோனுவை இழுத்து வந்திருக்கிறார். ஆனால் பிரபாவால் முடியவில்லை. எனவே அருகில் இருந்த கம்பியை பிடித்து சோனுவையும் கம்பியை பிடித்துக்கொள்ள சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பொதுமக்களை அழைத்துள்ளனர். ஆனால் குழந்தைகளை தண்ணீரில் தள்ளிய உடனேயே தந்தை குமார் அங்கிருந்து போய்விட்டார். இதன் பின்னர் நடந்த சம்பவங்கள் எதுவும் இவருக்கு தெரியாது.
கைது
சோனுவும், பிரபாவும் ஆற்றிலிருந்து கதறுவதை பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால் கடைசி குழந்தை 5 வயது ஹேமலதா மட்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உயிர் பிழைத்த சிறுவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தந்தை குமார் மீது IPC பிரிவுகள் 363, 307 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் தண்ணீரில் விழுந்தாலும் தன்னுடைய 2 சகோதரர்களை காப்பாற்றியுள்ள 12 வயது சிறுமி பிரபாவை ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர்.