சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்ட உடனே.. ட்விட்டர் மீது உ.பியில் எப்ஐஆர்.. செய்தியாளர்கள் மீதும் வழக்கு!
லக்னோ: ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்டபாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், தற்போது முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. காசியாபாத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக ட்விட்டர் நிறுவனம் மீதும், சில செய்தியாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசு சட்ட பாதுகாப்பை விலக்கிக் கொண்டு உள்ளது. புதிய ஐடி விதிகளின் படி ட்விட்டர் நிறுவனம் இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
மத்திய அரசு அளிக்கும் புகார்களை விசாரிக்க கூடிய வகையில் இந்தியர் ஒருவரை ட்விட்டர் நிறுவனம் நியமிக்க வேண்டும். அதேபோல் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் புகார்கள் மீது இந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#31YearsofInjustice .. தொடங்கியது பிரச்சாரம்.. பேரறிவாளன் விடுதலை எப்போது? பரபரக்கும் ட்விட்டர்
இல்லை
இந்த விதியை ட்விட்டர் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை , Chief Compliance Officer எனப்படும் இந்த பதவிக்காக இடைக்கால நிர்வாகி ஒருவரை ட்விட்டர் நிறுவனம் நியமித்து இருக்கிறது. இந்த நிலையில் ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. இதனால் இனி ட்விட்டரில் போஸ்ட் செய்யபப்டும் அனைத்து போஸ்ட்களுக்கும் ட்விட்டர் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
வழக்கு
இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காசியாப்பத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி அப்துல் சமாத் என்ற இஸ்லாமிய முதியவர் சில இளைஞர்களால் தாக்கப்பட்டு, அவரின் தாடி மழிக்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலானது. இஸ்லாமியர் என்பதால் அந்த முதியவரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி, கொடூரமாக தாக்கியதாக என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வழக்கு
ஆனால், இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை, இது மத ரீதியான மோதல் கிடையாது என்று உத்தர பிரதேச போலீஸ் விளக்கம் அளித்தது. அந்த முதியவர் விற்ற தாயத்து மீது இளைஞர்கள் புகார் வைத்ததால் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு மத ரீதியான காரணம் இல்லை. தாக்கிய இளைஞர்களில் இஸ்லாமியர்களும் இருந்ததாக உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
பின்னணி
இதையடுத்தே தற்போது ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தவறான செய்தியை வெளியிட்டு, மத ரீதியான மோதலை தூண்டியதாக ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தை தவறாக சித்தரித்து மத சாயம் பூசியதாக ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. அதோடு இது தொடர்பான டிவீ ட்களை நீக்கவில்லை என்றும் ட்விட்டர் மீது எப்ஐஆரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதேபோல் இந்த செய்தியை பகிர்ந்த செய்தியாளர்கள் ராணா அயூப், சபா நக்வி, முகமது சுபையர், தி வேயர் செய்தி தளம், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிசாமி ஷாமா முகமது, மஸ்கூர் உஸ்மானி ஆகியோர் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. தவறான செய்தியை பகிர்ந்ததாக இவர்கள் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. பொய்யான செய்தியை மத கலவரத்தை தூண்டும் வகையில் பகிர்ந்ததாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.