காலையில் காதலி.. மாலையில் இன்னொரு பெண்! ஒரேநாளில் 2 திருமணம் செய்த இளைஞர்! இப்போது சிக்கலை பாருங்க
லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தனது காதலியை நீதிமன்றத்தில் வைத்து காலையில் திருமணம் செய்தார். அதன்பிறகு காதல் மனைவிக்கு தெரியாமல் அந்த இளைஞர் தனது குடும்பத்தினர் பார்த்த இன்னொரு பெண்ணையும் அதேநாளில் திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய காலத்தில் சில நபர்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தங்களுக்கு திருமணம் ஆனதை மறைத்து இன்னொரு பெண்ணை கரம் பிடிக்கின்றனர். அதேபோல் சில பெண்களும் தங்களின் திருமணத்தை மறைத்து ஆண்களை கரம்பிடித்து மோசடி செய்வதை நாம் அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்போம்.

இவர்களின் திருமணம் என்பது வெவ்வேறு காலக்கட்டத்தில் நடந்து இருக்கும். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் ஒரே நாளில் 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். காலையில் தனது காதலியை கரம்பிடித்த அந்த இளைஞர், அதன்பிறகு குடும்பத்தினர் நிச்சயித்த பெண்ணை கரம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே ஹர்பூர் புத்தாட் பகுதியை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமாகி உள்ளார். இருப்பினும் இளைஞர் கூறியதன் பேரில் இளம்பெண் 2 முறை கர்ப்பத்தை கலைத்துள்ளார். இப்படியாக 2 பேரும் 4 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் அந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ளும்படி இளைஞரிடம் கூறியுள்ளார்.
ஆனால் இளைஞர் செவிசாய்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார். ஆனால் இளம்பெண் விடவில்லை. இதையடுத்து கோவிலில் வைத்து திருமணம் செய்தார். ஆனாலும் நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் இளைஞருக்கு அவரது வீட்டில் மணப்பெண் தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த இளைஞர், தனது காதலியை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பிய இளைஞர், அவசரஅவசரமாக தனது வீட்டுக்கு வந்து குடும்பத்தினர் பார்த்து நிச்சயம் செய்திருந்த இளம்பெண்ணையும் அன்றைய தினம் மாலையிலேயே குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த காதல் மனைவி இளைஞரின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார்.
அப்போது அவரை இளைஞரின் குடும்பத்தினர் அடித்து விரட்டி உள்ளனர். இதுதொடர்பாக காதல் மனைவி சார்பில் கோரக்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஜிதேந்திர குமார் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக புகார் பெற்றப்பட்டுள்ளது. காதல் மனைவி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications