அடுத்த சர்ச்சை! கிருஷ்ணா ஜென்மபூமிக்கு மிக அருகே உள்ள மசூதி.. மதுரா நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஞானவாபி மசூதி தொடர்பான விவகாரமே இன்னும் ஓயாத நிலையில், அதேபோல மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.
இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டு, அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர்.
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கு.. நீதிபதியின் பாதுகாப்பு பற்றி கவலைப்படும் குடும்பத்தினர்.. என்னாச்சு?
ஞானவாபி மசூதி
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Recommended Video
கிருஷ்ண ஜென்மபூமி
இதனிடையே இதேபோல மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மதுராவில் அருகே உள்ள கிருஷ்ண ஜென்மபூமியை ஒட்டியுள்ள ஷாஹி இத்கா மசூதியிலும் இதுபோல வீடியோ உடன் சர்வே எடுக்க வேண்டும் என்று மதுரா நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதி வளாகத்தில் இந்து தொல்பொருட்கள் மற்றும் பழங்கால மதக் கல்வெட்டுகள் உள்ளதாகவும் இதற்காக ஞானவாபி மசூதியைப் போல இங்கும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு
ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி மற்றும் ஷாஹி இத்கா மஸ்ஜித் இடையேயான அனைத்து வழக்குகளையும் நான்கு மாதங்களுக்குள் தீர்த்து வைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தடயங்கள் இருப்பதைக் கண்டறிய மசூதியிலும் இதுபோல வீடியோ உடன் சர்வே எடுக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட இடத்தில் எவ்வித கட்டுமான பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.
உடனடி விசாரணை
இது குறித்து வழக்கைத் தொடர்ந்து மணீஷ் யாதவ் கூறுகையில், "இந்த விவகாரத்தில் ஒரு மூத்த வழக்கறிஞரை, நியமித்து, வீடியே உடன் கூடிய ஆய்வை மேற்கொள்ள மதுரா நீதிமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்தேன். மசூதிக்குள் இன்னும் இந்து மதத்தின் எச்சங்கள் இருப்பதால், ஆய்வு உடனடியாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால், இதற்கான ஆதாரங்களை எதிர் தரப்பினர் நீக்க வாய்ப்புகள் உள்ளன" என்றார்.