ஹலோ! வேலையை காட்டிய மத்திய அமைச்சர்.. அலட்சியம் செய்த அரசு ஊழியர்.. விசாரணைக்கு அதிரடி உத்தரவு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போனில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை அடையாளம் காண தவறிய அரசு ஊழியர் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை, சிறுபான்மை நலத்துறையை நிர்வகித்து வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியை வீழ்த்தி சாதித்து எம்பியானவர் தான் இந்த ஸ்மிருதி இரானி.

தொகுதியில் ஸ்மிருதி இரானி
இந்நிலையில் தான் சொந்த தொகுதிக்கு ஸ்மிருதி இரானி சென்றார். அப்போது அவரிடம் தொகுதி மக்கள் குறைகளை கூறினர். இந்த வேளையில் கருனேஷ் என்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தனது பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கூறினார். மேலும் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

பென்ஷன் பிரச்சனை
அதாவது, ‛‛ஆசிரியராக இருந்த தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது பென்ஷன் தாய் சாவித்ரி தேவிக்கு வர வேண்டும். இதற்கு வெரிபிகேஷன் பணி பெண்டிங்கில் உள்ளது. அரசு ஊழியர் தீபக் என்பவர் வெரிபிகேஷன் செய்வதில் தாமதம் செய்கிறார். இதனால் எனது தாய்க்கு பென்ஷன் கிடைக்காத நிலை உள்ளது'' என கூறினார்.

போனில் பேசிய ஸ்மிருதி இரானி
இதை கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரான தீபக்குக்கு போன் செய்யும்படி கூறினார். அரசு அதிகாரிகள் அவருக்கு போன் செய்து கொடுத்தனர். போனில் ஸ்மிருதி இரானி பேசினார். அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுவதை அந்த ஊழியர் அறியாமல் இருந்தார். மேலும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மத்திய அமைச்சர் தலைமை வளர்ச்சி அதிகாரி அங்குர் லத்தாரிடம் போனை வழங்கினார்.

விசாரணைக்கு உத்தரவு
அப்போது பேசிய அவர், ‛‛தன்னை வந்து அலுவலகத்தில் பார்க்க வேண்டும்'' என தீபக்கிற்கு உத்தரவிட்டார். மேலும் அவர் தனது பணியை செய்யாமல் அலட்சியமாக இருந்தற்காக தீபக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். அதோடு சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications